Published : 21 Apr 2019 01:01 PM
Last Updated : 21 Apr 2019 01:01 PM

ஈஸி சுகப்பிரசவம்; சிசேரியனுக்கு குட்பை!

ஜெமினி தனா

 பெண்மை முழுமை அடைவது  தாய்மையில்தான். புதிய உயிரை உலகிற்குக் கொண்டு வரும் வரம் பெற்று வந்தவர்கள், பெண்கள். பிரசவத்தை மறுஜென்மம் என்பார்கள்.

20 வருடங்களுக்கு முன்பு ”சிசேரியனா.. அப்படின்னா…”  என்று ஆச்சரியமாக கேட்டோம். இப்போது ’சுகப்பிரசவமா’ என்று ஆச்சரியப்படுகிறார்கள். ஆனால் சரிவிகித சத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தாய் சேய் ஆரோக்கியம் காக்கப்படும்; பிரசவமும் சுகமாகும் என்பதை எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்?

என்னுடைய தோழி 30 வயதில் இரண்டாவதாக கருத்தரித்திருந்தாள். விளம்பரப் பிரிவில் பணிபுரிந்த அவள் எப்போதும் ஓட்டமும் நடையுமாகவே இருப்பாள். ஐந்துமாதங்கள் வரை உற்சாகமாக இருந்தாள். கருத்தரிக்கும் போது  தற்காலிகமாக  உண்டாகும் ரத்த அழுத்தம் அவளுக்கும் வந்தது. ரத்த அழுத்தம் 160ஐத் தொட்டிருந்தது. கால்கள் யானைக்கால் புசுபுசுவென கணக்காக வீங்கியிருந்தது. உடனடியாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெற வேண்டும் என்று மருத்துவர்கள் கண்டிப்போடு கூறினார்கள். குழந்தை வளர்ச்சி போதுமானதாக இல்லை.  அதனால் ரத்த அழுத்தம் மேலும் அதிகரித்தால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்றும் தெரிவித்தார்கள்.

பயந்து போன தோழி செய்வதறியாமல் ஊரிலிருக்கும் தன் மாமியாரை வரவழைத்தாள். பத்து பிள்ளைகளைப் பெற்று 80 வயதிலும் திடகாத்திரமாய் இருப்பவர் அவர்.  நடந்ததைக்  கேள்விப்பட்டதும் ’குழந்தைக்கும் உனக்கும் ஒன்றும் ஆகாது.. நீ வழக்கம் போல் மாதாமாதம் பரிசோதனை செய்து கொள்ள மட்டும் ஆஸ்பிட்டல் போ. நான் கொடுப்பதைச் சாப்பிடு’ என்றார்.  இடையில் அவளிடம் பேசும்போது ’அரிசிச் சோறு ஒரு கப், கீரை 3 கப், பழங்கள், கீரைகள், முளைக்கட்டிய தானியங்கள் தவிர வேறு எதையும் கண்ணில்  காட்ட மறுக்கிறார்ள்’ என்றாள்.

ஆயிற்று. இரண்டே மாதம். குழந்தையின் ஆரோக்கியம் கண்டு மருத்துவர்களே ஆச்சரியப்பட்டார்கள். ரத்த அழுத்தம் மட்டும் அதிலேயே இருந்தது. இது தற்காலிகமானது இதுவும் சரியாகும் என்று தைரியம் கொடுத்தார்.

பிரசவ நேரம் வந்த போது சிசேரியனாக இருந்தாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்திருந்தாள். ஆனால்  சுகப்பிரசவமாய் சரியான எடையில் அழகான ஆண்குழந்தை பிறந்தது. மருத்துவர்களின் ஆலோசனையும், மாமியாரின்  அன்பான உணவு உபசரிப்பும்தான் காரணம் என்றாள்.   

   கர்ப்பிணிகள் உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக  இருந்தால் தாய் சேய் ஆரோக்கியம் காக்கப்படும். பிரசவமும் எளிதாகும்.   ரசாயனம் கலக்காத உணவு வகைகளோடு நம் வாழ்க்கை என்பதே முக்கியம். இவற்றில் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துகொள்ளலாம் என்று பார்க்கலாமா? 

   உடலுக்குத் தேவையான  ஊட்டச்சத்துகள் அதிகரிக்கும் காலம் கருவுற்ற காலம்.  தாயின் உடம்பில் இருக்கும் சத்துகள் ரத்தமாக தொப்புள்கொடி வழியே குழந்தைகளுக்குக் கிடைக்கிறது. குழந்தைகளின் உறுப்புகள் ஆரோக்கியமாக வளர்ச்சியடைய இந்த ஊட்டச்சத்துக்களே பெருமளவு  பங்கு வகிக்கிறது. கருவுற்றகாலத்தை மூன்று காலங்களாக பிரிக்கிறார்கள்.

 முதல்  மூன்று மாதங்கள்: (1 முதல் 12 வாரங்கள்)

 கருத்தரித்த காலத்தில்  உடல் அசதி, சோர்வு, பயம் போன்றவை  உண்டாவது இயல்பானது. கருவுற்ற பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய  காலகட்டம் என்றும் சொல்லலாம். உடலில் போதிய சத்துக்கள் இல்லாவிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்பதால்  சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் கால்சியம் மற்றும் புரோட்டின் சத்துக்கள் நிறைந்திருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. கால்சியச் சத்து குறைவாக இருந்தால் குழந்தையின் எலும்பு  வலுவிழந்து மென்மையாக இருக்கும். அதனால் கூடுமானவரை  கால்சியம் சத்துக்கள் நிரம்பிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

  புரதச்சத்து தரும் பருப்புவகைகள், முளைகட்டிய பயறுகள்,  பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை  தினமும் ஒருவேளை எடுத்துகொள்வது நல்லது. அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை,கோழி இறைச்சி எடுத்துக் கொள்ளலாம்.  தற்போது ஹார்மோன் ஊசிகளால் கோழிகள் அபரிமிதமான வளர்ச்சியை அடைகின்றன. இது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்பதால் இயன்றவரை அசைவத்தைத் தவிர்ப்பதே நல்லது. தினம் ஒரு பயறை முளைகட்டி  சாலட் ஆக சாப்பிட்டால்  சத்துக்கள் தாய் சேய் இருவருக்கும் சரிவிகிதமாக கிடைக்கும். கருவின் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும்.

  கால்சிய சத்துக்களுக்கு பால், சோயாபால்,  பாதாம், ஆரஞ்சு பழச்சாறு, கேழ்வரகு,  காராமணி,  தயிர், அத்திப்பழம், பச்சைக்காய்கறிகள், மீன், ஓட்ஸ் போன்றவற்றிலிருந்து பெறப்படும் சத்துக்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கு நிறைவாகக் கிடைத்தால் வளர்ந்த பிறகும் மூட்டுவலி பிரச்சினைகளை அனுபவிக்க மாட்டார்கள். குழந்தையின் ஆரோக்கியம்  காக்க  முதல் மூன்று மாதங்களுக்கு  புரதமும், கால்சியமும் நிறைந்த உணவுகளை  எடுத்துக்கொள்ள வேண்டும்  என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.

இரண்டாவது காலம்: ( 13 முதல் 28 வாரங்கள்)

          இந்தக் காலங்களில் பெரும்பாலான பெண்களுக்கு வாந்தியும் குமட்டலும் சோர்வும் நீங்கியிருக்கும்.   குழந்தை போதிய வளர்ச்சி அடைந்து 400 கிராம் எடையில் இருக்கும். குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும் காலம் இது. இந்தக் காலம் முடியும் தருணத்தில் சிசுவின் அசைவுகளும் அதிகமாக இருக்கும். இப்போது தான் மலச்சிக்கல், நெஞ்சு எரிச்சல், செரிமான பிரச்சினை, மூச்சுவிடுதலில் சிரமம் முதலானவை தொடங்கும்.

  கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள்  சத்துக் குறைபாடு வராமல் இருக்க ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து அடங்கிய சத்து மாத்திரைகளைக் கொடுப்பார்கள்...ஆனால் இந்தச் சத்துக்கள் அடங்கிய உணவுகளை தவறாமல் எடுத்துக் கொண்டாலே  பிரசவத்துக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயாராகி விடுவார்கள்.

வைட்டமின் ஏ,பி,சி,டி,இ, புரோட்டின், கால்சியம்,  இரும்புச்சத்து  போன்ற  சத்துக்கள் அடங்கிய பொருள்கள் உங்கள் உணவில்  அன்றாடம் நிறைந்திருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.  முதல் காலத்தில் எடுத்துகொண்ட உணவு வகைகளோடு மற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவையும் இக்காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து வகையான  காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் குறிப்பாக முருங்கை மற்றும் பசலைக் கீரை, உலர் பழங்கள், பருப்பு வகைகள்,  கறுப்பு உளுந்து, கொண்டைக்கடலை, பேரிச்சம்பழம், ப்ரக்கோலி, பழங்கள், மைதாவை தவிர்த்து கேழ்வரகில் தயார் செய்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம்.   நாள் ஒன்றுக்கு 8 தம்ளர்   திரவ ஆகாரம் தேவை. தண்ணீர், சர்க்கரை கலக்காத பழச்சாறுகள் எடுத்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

 இயல்பிலேயே மலச்சிக்கல் பிரச்சினை உண்டாகும் என்பதால்  மைதாவால் தயாரிக்கப்பட்ட உணவுகள் வேண்டவே வேண்டாம். செயற்கை சுவையூட்டிகள் கலக்கப்பட்ட இனிப்பு வகைகள்,  அதிக காரம், மசாலாக்கள் நிறைந்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள்,  பழங்களில் அன்னாசி, பப்பாளிக்காய், பலாப்பழம், வேகவைக்காத  அரைவேக்காட்டு உணவுகள், செயற்கை நிறமூட்டிகள் கலக்கப்பட்ட  குளிர்பானங்கள்,  காபி, டீ,  கிரீன் டீ இவை எதையும்  ருசித்து விடாதீர்கள். இதனால் ஏற்படும் ஆரோக்கியக் குறைவு உங்களுக்கு மட்டுமல்ல பிறக்கும் குழந்தைக்கும் உண்டாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்ப்பகாலத்தில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள்  இனிப்பையும், உப்பையும் முற்றும் தவிர்க்காமல் மருத்துவரது ஆலோசனைப்படி எடுத்துகொள்வதே நல்லது.

மூன்றாவது கட்டம் : ( 28 -32 வாரம் வரை)

  இரண்டு உயிர்கள் என்பதால் அளவுக்கதிகமான  உணவைச் சாப்பிட்டு, உடல் எடையை அதிகரித்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முதல் மூன்று மாதங்களில் 1 முதல் 1.5 கிலோ வரையிலும், அடுத்த காலகட்டத்தில் 5 முதல் 7  கிலோ வரையிலும், மூன்றாவது காலமான பேறு காலத்தில் 2  முதல் 3 கிலோ வரையிலும் எடை  அதிகரிக்கலாம். தவறில்லை.  

கர்ப்பிணிகள் 10 முதல் அதிகபட்சமாக 18 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கலாம். எளிதில் செரிமானமாகும் எளிய உணவு வகைகளே இந்தக் காலத்தில் ஏற்றது.

 கர்ப்பிணிகள், இந்த மூன்று கால கட்டத்திலும் திட்டமிட்டு  உணவை  எடுத்து கொண்டால்   சுகப்பிரசவம் சாத்தியம்; சிசேரியனுக்கு குட்பை என்று உறுதிபடத் தெரிவிக்கிறார்கள் மருத்துவர்களும் நம் வீட்டு மூதாட்டிகளும்!

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x