Last Updated : 20 Mar, 2019 10:46 AM

 

Published : 20 Mar 2019 10:46 AM
Last Updated : 20 Mar 2019 10:46 AM

போப்பிடம் அண்ணா வைத்த வேண்டுகோளும் கதறியழுத விடுதலை வீரரும்

அண்ணா நினைவிடத்தில் கதறியழுதுகொண்டிருந்த அந்த மனிதர் கொஞ்சம் வித்தியாசமானவராகத் தெரிந்ததில் ஆச்சரியம் இல்லைதான். அவர் மோகன் ரானடே, ஒருகாலத்தில் போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்து கோவாவின் சுதந்திரத்துக்காகப் போராடிய விடுதலைப் போராட்ட வீரர் அவர்! எங்கோ பிறந்த ரானடே ஏன் அண்ணாவின் மறைவுக்காகக் கண்ணீர்விட்டார்?

கோவா விடுதலைக்குப் போராடிய அவரைத் தனிமைச் சிறையில் அடைத்துவைத்திருந்தது போர்ச்சுக்கீசிய அரசு. போர்க்குற்றவாளி ஆக்கப்பட்ட அவர் ஆயுள் தண்டனையில் இருந்தார்.

1961-ல் கோவா விடுதலையடைந்து, இந்தியாவின் ஒரு பகுதியாக இணைந்துவிட்டது என்றாலும்கூட, தொடர்ந்து போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள காக்சியா சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தார் ரானடே. தமிழக முதல்வரான பின் 1968-ல் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார் அல்லவா? அந்தப் பயணத்தினூடாக, போப் ஆண்டவரையும் சந்தித்தார் அண்ணா. அப்போது போப்பிடம் அவர் முன்வைத்த வேண்டுகோள், “எங்கள் நாட்டின் விடுதலை வீரர் மோகன் ரானடேவை விடுவிக்க, போர்ச்சுக்கல் அரசிடம் நீங்கள் பேச வேண்டும்” என்பது. உள்ளபடி, அண்ணாவுடன் சென்ற பலரையும் இது ஆச்சரியப்படவைத்தது.

புன்னகைத்த போப், “நம்பிக்கையுடன் சென்றுவாருங்கள்” என்றார். கத்தோலிக்க நாடான போர்ச்சுக்கல் விரைவில் ரானடேவை விடுவித்தது. 1969-ல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ரானடே முதலில் சந்திக்க விரும்பிய மனிதர் அண்ணா. ஆனால், அதற்குள் அண்ணா மறைந்திருந்தார். சென்னை வந்த ரானடே கதறியழுதார்.

‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகம் வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்: https://www.kamadenu.in/publications

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x