Published : 25 Dec 2018 11:12 AM
Last Updated : 25 Dec 2018 11:12 AM

360: இந்திய அதிகார வர்க்கம் பெரிதல்ல!

இந்தியாவில் அரசு ஊழியர்கள் அதிகம் என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல என்கிறது ஏழாவது ஊதியக் குழுப் பட்டியல். மத்திய அரசுப் பணியில் உள்ள ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை நாடு முழுவதற்கும் சேர்த்து 33 லட்சம். ரயில்வே, தபால் துறை ஊழியர்களை இதில் கழித்துவிட்டால் இந்த எண்ணிக்கை மிகவும் குறைந்துவிடுகிறது. இந்திய மக்கள்தொகையின்படி ஒரு லட்சம் குடிமக்களுக்கு 139 மத்திய அரசு ஊழியர்கள்தான் இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் ஒரு லட்சம் குடிமக்களுக்கு 668 அரசு ஊழியர்கள் இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல், மத்திய அரசுப் பணிகளுக்கு அரசு அனுமதித்த இடங்களுக்கும் பணியில் இருப்பவர்கள் எண்ணிக்கைக்கும் இடையில் பெருத்த இடைவெளி இருக்கிறது. நிறையப் பணிகள் நிரப்பப்படாமல் இருக்கின்றன!

 

கிறிஸ்துவின் வீடு

வாழுமிடம், மூலாதாரம், சொர்க்கம், தாயின் கருப்பை, பூர்வ அடைக்கலம், விடுதலை என ‘வீடு’ என்ற அந்தச் சின்னச் சொல் குறிக்கும் அர்த்தம் பெருகிக்கொண்டே போவது.

கருவிலிருந்து வெளிவருவதற்கு முன்பே வீட்டைத் தேடத் தொடங்கியவர் கிறிஸ்து. கடவுளின் மைந்தனாயினும் பல்வேறு இடையூறுகளுக்கிடையே பாலைவெளியில் மாட்டுத்தொழுவத்தில் பிறந்து அந்த இடத்தையும் அங்குள்ள எளிய வாழ்க்கையையும் ஒரு மகத்துவமான குறியீடாக்கிக்கொண்டவர்.

christjpg

மாட்டுத்தொழுவத்தில் பிறந்து, சிலுவைப்பாட்டை எதிர்கொண்டு மரித்திருக்காவிடில் உலகில் அத்தனை ஏழைகள், அத்தனை ஒடுக்கப்பட்டவர்கள், அத்தனை குடிசைப்புறங்களில், அவர் நட்சத்திர விளக்குகளுடன் இன்றும் நினைவுகூரப்பட முடியுமா? கிறிஸ்துவைப் மையமாகக்கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் வீடென்ற ஒன்றை அதன் எல்லா பரிமாணங்களிலும் தேடி அலைந்த தமிழ்க்கவிஞன் பிரமிள் எழுதிய கவிதை இது.

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி சொன்னதுபோல மனத்தின் வாழ்க்கையை வாழத் தொடங்கிவிட்ட தலைமுறையினரான நம்மை மனத்தின் இருண்ட அனுஷ்டானங்கள் வீடு திரும்பவிடாமல் தடுத்துத்தான் கொண்டிருக்கின்றன. இருண்ட கானகக் குரல்களின் ஊர்வலம் ஒரு காலத்தில் நகரத்துச் சந்தையில் கேட்டது. நமது காலமோ, நாம் உறையும் அறையில் நம்மை விழுங்கக் காத்திருக்கும் சுவர்களின் நடுவிலேயே சந்தை இரைச்சலைப் பரப்பியுள்ளது.

ஆன்மாவை உருவாக்க வேண்டிய பொறுப்பு மனிதர்களுக்கு உள்ளது போன்றே, வீட்டைக் கண்டடைய வேண்டிய பொறுப்பும் நம்மிடம்தான் உள்ளது. ஆனால், வீடென்று ஒன்று நிச்சயம் உண்டு. வீடு ஒன்றுண்டெனவே எண்ணுகிறேன் என்று பிரமிள் சொல்கிறார். 

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,
தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in

 

சுவர்கள்

மனசின் இருண்ட அனுஷ்டானங்கள்

என்னை வீடு திரும்பவிடாது தடுத்துக்கொண்டிருக்கின்றன.

இருண்ட கானகக் குரல்களின் ஊர்வலம் ஒன்று நகரச்

சந்தையில் அலைகிறது.

pramiljpgright

வீடு திரும்பும் வழி தெரியவில்லை.

அன்று -

ஒரு மாட்டுக்கொட்டிலின் மஞ்சள் வைக்கோல் மீது பிறந்து

கிடந்த சிசு மூன்று சக்கரவர்த்திகளை நோக்கித் திறந்த

பாலைவெளியினூடே ஒரு நக்ஷத்திரத்தின் அழுகையில்

அழைத்து வழிகாட்டிற்று.

நான் சக்கரவர்த்தியுமல்லன்.

சூழச் சுவர்களின் இனம் மூடும் நகர்

ஒரு திறந்தவெளியுமல்ல, பாலையாயினும்

வீடுகள் யாவும் வாயிளித்து ஆபாசமான பசியைப் போன்று

நிற்கக் கண்டவனாயினும்,

வீடு

ஒன்றுண்டெனவே எண்ணுகிறேன்.

இந்தச் சுவர்களினுள் விழுங்கப்பட அல்ல.

கருவாகி

புனிதத் தசைகளில் ஊறும் ரத்தச்சுனையைக் காண.

- பிரமிள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x