Published : 24 Feb 2024 06:39 AM
Last Updated : 24 Feb 2024 06:39 AM

இந்திய ஊடகங்கள் எப்போது உலகத்தை ஆளப்போகின்றன?

கடந்த சில பத்தாண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி, புவிசார் அரசியலில் (geopolitics) கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பு கீழைநாடுகள் (Eastern World) என்றும் இன்று தெற்குலகம் (Global South) என்றும் அழைக்கப்படும் நாடுகள் உலகத்தின் பெரும் சக்தியாக மாறுவதை, மேலை நாடுகளால் (Western World or Global North) எளிதாக ஜீரணிக்க முடியவில்லை. உலகத்தின் முதல் இரு பெரும் பொருளாதார சக்திகளாக அமெரிக்க ஐக்கிய நாடுகளும், சீனாவும் இருக்கின்றன.

முதல் 2 இடத்திற்குள் சீனா வந்துவிட்ட நிலையில், 3-வது மற்றும் 4-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி மற்றும் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா 3-வது இடத்தைப் பிடிப்பதற்கு, இன்னும் சில வருடங்களே ஆகும் என்பதால், மேலை நாடுகளின் ஊடகங்கள் குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஊடகங்கள் கடும் பதற்றத்தில் உள்ளன. உலகத்தின் முதல் 3 பெரிய பொருளாதாரத்தில் தெற்குலகின் 2 நாடுகள் இடம் பிடித்து விடும் என்பதை 10 ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்த ஊடகங்களால் கற்பனை செய்து பார்க்க முடிந்ததில்லை.

மேற்கத்திய நாடுகளின் ஊடகங்களால் இந்தியாவின் விரைவான எழுச்சியை ஜீரணிக்க முடியாத காரணத்தினால். இந்தியாவின் வளர்ச்சியில் குற்றம் குறை தேடிக் கொண்டே இருக்கின்றன. இந்தியா போன்ற ஒரு பெரிய பன்முகத்தன்மை கொண்ட நாடு எப்போதுமே பலவிதமான பார்வைகளைக் கொண்டிருக்கும். பல மொழி, பல மாநிலங்களில் நிலவக் கூடிய துடிப்பான ஊடக சூழல் இருப்பதால், அரசியல் கட்சிகள் மற்றும் தனி நபர்கள் தங்கள் கருத்துக்களை உரத்தக் குரலில் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்கள். இதை பயன்படுத்திக் கொண்டு, மேலை நாடுகளின் ஊடகங்கள் இந்தியா பிளவுபட்டு நிற்கிறது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். திட்டமிட்டே இந்தியாவின் பல்வேறு துறை சாதனைகளை தொடர்ந்து இளக்காரம் செய்கிறார்கள்.

ஒரு காலத்தில் மின்னணு ஊடகமாக அரசு தரப்பு வானொலியும் தொலைக்காட்சியும் இருந்தன. கடந்த 30 ஆண்டுகளில் தனியார்மின்னணு ஊடகங்களின் வருகை காரணமாகஇன்று பல்வேறு மொழிகளில் எண்ணிலடங்கா அலைவரிசைகள் (channels) வந்துவிட்டன. ஆனால் அவை இன்றும் தங்களை இந்தியஅளவிலேயே சுருக்கிக் கொண்டு செயல்படுகின்றன. இந்தியாவின் நிறுவனங்கள் தங்களது எல்லைகளை உலகளவில் பரப்பியுள்ளன. இந்திய திறனாளிகள் உலக நிறுவனங்களில் பல்வேறு பெரிய பொறுப்புகளை ஏற்றுள்ளனர். உலக நாடுகளுக்கிடையே இந்தியா அதிக பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன் ‘கோவிட்’ தொற்றுக்கு பிறகு முதல் இடத்தை தொடர்ந்து பெற்று வந்தது. இந்தியாவின் யோகா உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. எனினும் தனியார் மின்னணு ஊடகங்கள் வெளிநாடுகளில் தடம் பதிப்பதில் தயக்கம் காட்டி வருகின்றன.

இந்திய தனியார் மின்னணு ஊடகங்கள் தடம் பதிப்பதில் குறைந்தது 3 அனுகூலங்கள் உள்ளன. இந்தியாவின், அரசியல், பொருளாதார, கலாச்சார, பண்பாட்டு, சமூக, தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்வதிலும் உலகளவில் பெரும் ஆவல் உள்ளது என்பதால் பார்வையாளர்களுக்கு பஞ்சமிருக்காது என்பது முதல் அனுகூலம். இரண்டாவது, இந்தியாவைப் பற்றிய தவறான பிம்பங்களை தொடர்ந்து காழ்ப்புணர்ச்சியுடன் பரப்பி வரும் சில சக்திவாய்ந்த ஊடகங் களுக்கு சரியான பதிலடி கொடுக்க முடியும். பல்வேறு துறைகளில் இந்தியா செய்து வரும் சாதனைகளை எடுத்துரைப்பதன் மூலம் பல புதிய பரஸ்பர பொருளாதார தொழில்நுட்ப, கல்வி திட்டங்களுக்கும், வெளிநாட்டவர்கள் இந்தியாவில் பெரிய அளவில் சுற்றுலா வருவதற்கும் உந்துகோலாக இருக்க முடியும் என்பது 3-வது அனுகூலம்.

ஜெய்ப்பூரில் செப்டம்பர் 20, 2020 அன்றுநடந்த ஒரு பத்திரிகை விழாவில் புத்தகங்களை வெளியிட்டு பேசிய பிரதமர் மோடி இதை கோடிட்டு காட்டி விட்டார். ‘‘நமது பத்திரிகைகளும், மின்னணு ஊடகங்களும் உலகளவில் பெயர் வாங்க வேண்டுமென்றால், இன்றைய டிஜிட்டல் உலகத்தில் நமது ஊடகங்கள் உலகளவில் செல்வதற்கு தடையேதுமில்லை. அது மட்டுமல்ல, உலகத்தின் பல்வேறுநாடுகளில் இருக்கும் அமைப்புகள் இலக்கியவிருதுகளை சிறந்த புத்தகங்களுக்கும், சிறந்த ஊடக செயற்பாடுகளுக்கும் வழங்குவதை போல இந்திய ஊடகங்கள் விருதுகளை உருவாக்கி வழங்க வேண்டும்.

இந்தியாவின் குரலை உலக நாடுகள் புறக்கணித்த காலங்கள் போய், இந்தியாவின் குரல் உலகளவில் கேட்கக் கூடிய நிலை வந்து விட்ட நிலையில், இந்திய ஊடகங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது காலத்தின் தேவை மட்டுமல்ல இந்திய திருநாட்டிற்கும் நன்மை பயக்கும் செயலாக இருக்கும்’’ என்று பிரதமர் பேசினார்.

டிஜிட்டல் உள்கட்டமைப்பு இணைப்பில் (Public Digital Infrastructure Network) வேறெந்த நாட்டை விடவும் குறுகிய காலத்திலேயே இந்தியா புலிப் பாய்ச்சலைக் காட்டியிருக்கிறது. அதன் மூலம் பணப்பரிவர்த்தனையை எளிதாக்கிஇருக்கிறது. இந்தியா வளர்ந்த நாடுகளைப் பார்த்து கற்றுக் கொண்ட காலம் போய், வளர்ந்த நாடுகள் இந்தியாவின் வெற்றி வழிமுறைகளை பார்த்துப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனை மட்டுமில்லாது, இந்தியாவின் start-up தொழில் முனைவு ஒரு லட்சம் start-up தொழில் முனைவோர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட start-up முயற்சிகள் ரூபாய் 8,000 கோடி மதிப்பை தாண்டி யுனிகார்ன் (unicorn) என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளன.

மொத்தம் 6.3 கோடி கிலோ மீட்டர் தார் சாலைகளுடன் உலகத்தின் 2-வது பெரிய சாலை கட்டமைப்பை கடந்த 10 வருடங்களில் இந்தியா அடைந்துள்ளது.

(தொடரும்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x