Last Updated : 08 Nov, 2017 08:46 AM

 

Published : 08 Nov 2017 08:46 AM
Last Updated : 08 Nov 2017 08:46 AM

நம் அரசியலமைப்புச் சட்டத்தின் பல பகுதிகள் செத்துவிட்டன!

திமுகவின் சித்தாந்தக் குரல்களில் முக்கியமானவர் நாகநாதன். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பொருளாதார நிபுணர்களில் ஒருவர். அரசியலமைப்புச் சட்டத்திலும் நிபுணத்துவம் உடையவர். பெரியார், அண்ணா, கருணாநிதி என்று திராவிட இயக்கத்தின் மூன்று பெரும் ஆளுமைகளுடனும் உறவில் இருந்தவர். குடும்பப் பின்னணி சார்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்கங்களின் செயல்பாடுகளையும் நெருக்கத்தில் பார்த்தவர். கருணாநிதியின் நடைப்பயிற்சி இணையுமான நாகநாதன், திமுக ஆட்சியில் மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவராகவும் இருந்தவர். வரலாற்றில் தொட்டு திராவிட இயக்கம், தமிழகம், இந்தியா செல்ல வேண்டிய பாதை என்றெல்லாம் பேசினார் நாகநாதன். ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்!’ நூலிலிருந்து…

தேசிய இயக்கம், பொதுவுடைமை இயக்கம் இவை இரண்டிலிருந்தும் திராவிட இயக்கத்தை எப்படி வேறுபடுத்துவீர்கள்? அதாவது, உங்களுடைய தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில்?

நான் பிறந்தது திருவாரூர். பின்னாளில் வளர்ந்தது எல்லாம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில். சின்ன வயதிலேயே திராவிட இயக்கப் பற்று வந்துவிட்டது. விசித்திரம் என்னவென்றால், எங்கள் குடும்பத்தில் நான்தான் அப்படி. காங்கிரஸ் குடும்பம். தாய்மாமா எம்.எஸ்.ராஜா சுதந்திரப் போராட்ட வீரர். ஆகையால், என் அம்மாவே என்னைக் கடுமையாகக் கண்டிப்பார். ஆனால், எனக்குத் திராவிட இயக்கம்தான் பிடித்தது. இளம் பிராயத்திலேயே பெரியார் மீது ஒரு ஈர்ப்பு. சிந்தாதிரிப்பேட்டை ‘விடுதலை’ அலுவலகத்துக்கு அவர் வரும்போது எங்கள் தெரு வழியாகத்தான் அவருடைய வேன் போகும். நாங்கள் சிறுவர்கள் எல்லாம் வேனின் பின்புறத்தில் தொற்றிக்கொண்டு போவோம்.

உள்ளே போனால், சாக்லேட் கொடுப்பார். பேசுவார். அந்தக் கருத்துகள் அப்படியே உள்ளே போய்விட்டன. சின்ன வயதிலேயே காமராஜரையும் பார்த்துவிட்டேன். ஒரு கூட்டத்துக்கு வந்திருந்தார். கூட்டம் முடித்து குளக்கரை ஒதுக்கத்தில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தவர் சிறுவர் கள் எங்களைப் பார்த்ததும் அப்படியே அதைக் கீழே போட்டுவிட்டு ‘சாரி’ என்றார். அதுவே பெரிய மரியாதையை உண்டுபண்ணிவிட்டது.

பின்னாளில் நிறைய அவருடன் பேசியிருக்கிறேன். அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல என்னுடைய மாமனார் க.ரா.ஜமதக்னி தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர். மார்க்ஸிய அறிஞர். சம்ஸ்கிருத மொழியையும் கசடறக் கற்றவர். ‘மூலதனம்’ 6 தொகுதிகளையும் மொழிபெயர்த் தவர். ஆக, தேசிய இயக்கம், பொதுவுடைமை இயக்கம் இரண்டையும் வெறுமனே புத்தகங்கள் அல்லது வெளியே தெரியும் காட்சிகள் வழியாக மட்டும் அல்லாமல் நான் உள்வாங்கியிருக்கிறேன்.

இரண்டு இயக்கங்களிலும் உள்ள நல்ல விஷயங்களை நிறைய எடுத்துக்கொண்டிருக்கிறேன். நான் எப்போதும் அணியும் கதராடைகூட அப்படி எடுத்துக்கொண்டதுதான். ஆனால், இந்தியாவில் எல்லாப் பிரச்சினைகளுக்குமான வேருமே இங்கே சாதியிலும் தீர்வுகள் சமூக நீதியிலும் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. திராவிட இயக்கம்தான் அதைப் பேசியது. பின்னாளில் எல்லாத் தத்துவங்களையும் உள்வாங்கிய பிறகு, திராவிட இயக்கத்தின் மீதான மரியாதை மேலும் அதிகமானதே தவிர குறையவில்லை.

ஒரு பொருளாதார ஆய்வாளராக திராவிடக் கட்சிகளின் ஆட்சியை மதிப்பிடச் சொன்னால், எதைப் பிரதானமான சாதனையாகச் சொல்வீர்கள்?

அறிஞர் பால் சீட்டன் சொல்வார், “சமூகத் தளத்தில்தான் பொருளாதார நடவடிக்கைகள் இயங்கும்” என்று. பொதுவாக நம் நாட்டில் சமூக நீதி, சமூக நலத் திட்டங்கள் சார்ந்து வளர்ச்சியை அணுகும் ஆய்வுகள் இன்னும் உரிய கவனம் பெறவில்லை. தமிழ்நாட்டை வளர்ச்சியின் முன்னுதாரணமாக அமர்த்திய சென் குறிப்பிடும் வரை தேசிய ஊடகங்கள், ஆய்வாளர்கள் என்றெல்லாம் சொல்லிக்கொள்பவர்கள் திராவிடக் கட்சிகளின் சமூக நலத் திட்டங்களை ‘இலவச அரசியல்’ என்றும் ‘வெகுஜன கவர்ச்சி அரசியல்’ என்றும்தானே ஏகடியம் பேசிக்கொண்டிருந்தார்கள்? இப்போது தமிழ்நாட்டைப் பார்த்து தேசியக் கட்சிகள் ஆளும் ஏனைய மாநிலங்களிலும் இதே போன்ற திட்டங்களை முன்னெடுக்கும்போதுதானே ‘சமூக நலத் திட்டம்’ என்று பெயர் மாறுகிறது!

பொருளாதாரம் சார்ந்தே திராவிடக் கட்சிகளின் மிக முக்கியமான சாதனை என்று சமூக நீதி, இடஒதுக்கீட்டில் அவர்கள் காட்டிய அக்கறையைக் குறிப்பிடுவேன். ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அவர்களுடைய அடுத்த சாதனை சமூக நலத் திட்டங்கள். சமூகமும் பொருளாதாரமும் இணைகிற புள்ளிகள் இவை. ஓர் உதாரணம்- குழந்தை கள் நலத் திட்டம் தமிழ்நாட்டில் இருப்பது மாதிரி இந்தியா வில் வேறு எங்கேயும் இல்லை.

குழந்தைதானே முதலில்? அதனுடைய உடல்நிலை பலவீனமாக இருக்கும்போது, எப்படி எதிர்காலத்தில் வளர்ச்சி ஏற்படும்? 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, ‘பிமாரு மாநிலங்கள்’ என்று சொல்லப்படும் உத்தர பிரதேசம், பிஹார் உள்ளிட்ட இந்தி மாநிலங்களில் மட்டும் 51% குழந்தைகள் வளராத குழந்தைகளாக இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இந்தியாவின் வறுமை நிலம் என்று இந்த மாநிலங்களைச் சொல்கிறோம். இரண்டையும் பொருத்திப் பாருங்கள். ஆனால், தமிழகத்திலோ நிலைமை நேர் எதிர். காரணம், சத்துணவுத் திட்டம். இதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால், ஒரு சத்துணவுத் திட்டத்தைச் செயல்படுத்தக்கூட சமூக நீதி எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது என்பதை நான் விளக்குகிறேன்.

முதலில் நீதிக் கட்சி அதை ஒரு சின்ன அளவில் கொண்டுவருகிறது. பின்னாளில், காமராஜர் அதை மதிய உணவுத் திட்டமாகக் கொண்டுவருகிறார். எம்ஜிஆர் அதைச் சத்துணவாக்குகிறார். எம்ஜிஆர் பெயரிலேயே இருந்தாலும்கூட அந்தத் திட்டத்தின் பெயரைக்கூட மாற்றாமல் கலைஞர் அதை மேலும் மேம்படுத்துகிறார். சனிக்கிழமையும் சேர்த்து வாரம் ஆறு முட்டை போடுகிறார். அடுத்து ஜெயலலிதா அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு 13 வகையான கலவை சாதம் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவருகிறார்.

எவ்வளவு பெரிய தொடர்ச்சி! தொடக்கத்தில் “இது திட்டம் இல்லை. சாப்பிடுவது எப்படி வளர்ச்சிக் கணக்கில் வரும்?” என்று ஏகடியம் பேசிய திட்டக் குழு, பின்னாளில் சத்துணவுத் திட்டத்தை ஒரு தேசியக் கொள்கையாக அறிவித்தது. அதாவது, 45 வருடங்களுக்குப் பிறகு. ஆனாலும், வெற்றி பெறவில்லை! ஏன்? இங்கேதான் சமூக நீதிக்கு ஒரு அரசியல் இயக்கம் கொடுக்கும் முக்கியத்துவம் வருகிறது.

சாதிக்கு எதிரான திராவிட இயக்கத்தின் போராட்டம் சாதி உணர்வை இங்கே ஒழிக்கவில்லை என்றாலும், சாதி வெறியை இல்லாமல் ஆக்கியிருக்கிறது. ஆனால், ஏனைய மாநிலங்களின் நிலை அதுவல்ல. பல மாநிலங்களில் சத்துணவுக்கூடம் வந்தபோது, எல்லாச் சாதியினரும் எப்படி ஒன்று சேர்ந்து உட்கார்ந்து, ஒரே சாப்பாட்டைச் சாப்பிடுவது என்ற பிரச்சினை வந்தது. பிஹாரில் முதல் சமையல் கூடம் திறக்கப்பட்டபோது, சமையலர் ஒரு தலித் பெண் என்பதற்காக அந்த உணவையே கொண்டுபோய்க் கொட்டினார்கள்.

நாடாளுமன்றம் இதுகுறித்து விவாதித்தது. என்ன விவாதித்தது? சாப்பாட்டுக்குப் பதில் பேசாமல் பிஸ்கட் கொடுத்துவிடலாமா என்று விவாதித்தது. ஆனால், “ஏன் பிராமணப் பிள்ளைகளுக்கும் ஏனைய பிள்ளைகளுக்கும் ஒரே இடத்தில் சாப்பாடு போட மறுக்கிறீர்கள்?” என்று  சேரன்மாதேவி குருகுலம் விவகாரத்தில் வ.வே.சு.அய்யருடன் மோதி,  வகுப்புவாரி உரிமை விவகாரத்தில் ராஜாஜியோடும் கசந்து காங்கிரஸிலிருந்தே பெரியார் வெளியே வந்த வரலாறு தமிழ்நாட்டினுடையது.

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட பெண்கள்தான் பள்ளிகளில் அதிக அளவில் சமையலர்கள். ஏன் பிரச்சினை நடக்கவில்லை? இங்கேதான் திராவிட இயக்கத்தின் வேலை இருக்கிறது. அது காமராஜரோ ஜெயலலிதாவோ யார் திட்டத்தைத் தொடங்கினாலும் களம் தயாராக இருக்க வேண்டும் இல்லையா? அந்த வேலையை இங்கே பெரியார் பார்த்திருக்கிறார். திராவிடர் இயக்கம் - திராவிடக் கட்சிகள் தொடர்ந்து பார்த்திருக்கின்றன என்று சொல்கிறேன். தமிழ்நாட்டின் கல்வி, சுகாதாரத் துறை வளர்ச்சியை ஒப்பிட வேண்டும் என்றால், முன்னேறிய நாடுகளுடன் தான் ஒப்பிட வேண்டும்; ஏனைய இந்திய மாநிலங்களுடன் ஒப்பிட முடியாது என்றார் அமர்த்திய சென்.

மத்திய அரசு கல்விக்கு உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தியில் 3.2% செலவிடும்போது, தமிழ்நாடு 10.2% செலவிடுகிறது. மத்திய அரசு பொதுச் சுகாதாரத்துக்கு 1.5% செலவிடும்போது, தமிழ்நாடு 13% செலவிடுகிறது. இந்தத் துறைகளின் வளர்ச்சிதான் பொருளாதார வளர்ச்சிக்கும் வழி அமைத் திருக்கிறது. உலகிலேயே சிறந்த அரசு குழந்தைகள் மருத்துவமனை சென்னை எழும்பூர் மருத்துவமனை. உலகின் மிகச் சிறந்த கால்நடைப் பல்கலைக்கழகங்களில் ஒன்று வேப்பேரி மருத்துவமனை. இரண்டையும் தொடர்புபடுத்திப்பாருங்கள். வளர்ச்சி என்பதன் பின்னணியிலுள்ள தொலைநோக்கும் அர்ப்பணிப்பும் புரியும்!

தமிழகத்தில் தொழில் துறை அடைந்திருக்கும் வளர்ச்சி போதுமானது என்று நினைக்கிறீர்களா?

போதுமானது என்று சொல்ல மாட்டேன். அதேசமயம், அடைந்திருக்கும் வளர்ச்சி சாதனை என்று சொல்வேன். இந்தியப் பொருளாதாரம் என்பது குஜராத்தி பொருளா தாரம்தான். நேரு காலத்தில் வந்த அன்சாரி குழு அறிக்கையே தேசிய அளவில் 80% பொருளாதாரம் குஜராத்தி கள் கையில் இருப்பதைச் சொன்னது. குஜராத்திலும் மகாராஷ்டிரத்திலும் குஜராத்திகள் தங்களை நிலைநிறுத்திக்கொண்டதன் விளைவாக, இந்த இரு மாநிலங்கள் போக மிச்ச 20% பொருளாதாரத்துக்குள்தான் ஏனைய எல்லா மாநிலங்களின் பொருளாதாரமும் உள்ளடக்கம்.

நவீன இந்தியாவில் தமிழ்ச் சமூகத்தை ஒரு பெரும் வணிகச் சமூகம் என்று சொல்ல முடியாது. தவிர, நம் நாட்டு அரசியலமைப்புச் சட்டப்படி, தொழில் துறையில் தனிப் பாதையில் செல்ல மாநில அரசுக்கு என்று பெரிய அதிகாரங்களும் கிடையாது. இப்படிப்பட்ட சூழலில் இன்று மகாராஷ்டிரம், குஜராத்துக்கு அடுத்த நிலையில் தொழில் துறையில் தமிழகம் இருக்கிறது என்றாலே அது பெரிய சாதனை! விவசாயமும் அப்படித்தான்.

உத்தர பிரதேசம், பஞ்சாப் போன்ற பல மாநிலங்களின் நீர், நில வளத்தோடு தமிழ்நாட்டை ஒப்பிடவே முடியாது. அதைத் தாண்டியும் நாம் சாதித்திருக்கிறோம். நம்முடைய விவசாயிகளில் 98% பேர் சிறு விவசாயிகள். காரணம், திராவிட இயக்க ஆட்சி யில் இங்கே நிலங்கள் பெரிய அளவில் பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளன. நில உச்ச வரம்புச் சட்டம், நிலமற்றோருக் கான இரண்டு ஏக்கர் நிலமளிப்புத் திட்டம் இரண்டாலும் பெரிய அளவில் சாத்தியமானது இது.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் மட்டும் 70% வரி வருவாயை டெல்லிக்குத் தருகின்றன. டெல்லியிடம் தமிழ்நாடு 100 ரூபாய் கொடுத்துவிட்டு 10 ரூபாய் வாங்குகிறது என்றால், உத்தர பிரதேசம் 10 ரூபாய் கொடுத்துவிட்டு 100 ரூபாய் வாங்குகிறது. பக்தவத்சலம் காலத்திலேயே, நிதிக் குழுவுக்கு 1966-ல் ஒரு அறிக்கை கொடுத்தார். தமிழ்நாட்டை நீங்கள் வஞ்சிக்கக் கூடாது என்றார். இப்படியான வஞ்சனை இன்று வரை தொடர்கிறது. இந்த வஞ்சனைக்கு இடையிலும்தான் எல்லாக் கட்டமைப்புகளும் இங்கே உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டச் சீர்திருத்தம் தொடர்பாகத் தொடர்ந்து பேசிவருபவர் நீங்கள். இன்றைய சூழலில் உங்களிடம் கேட்டால் மாற்றத்துக்கான முன்மொழிவு என்னவாக இருக்கும்?

அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள் இவை தவிர நம்முடைய அரசியலமைப்பில் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று சொல்வேன். அடிப்படையிலேயே அது மக்கள் கருத்தைக் கேட்டு உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம் அல்ல; நிபுணர்களின் அரசியல் அமைப்புச் சட்டம். பெண்களுக்கு ஓட்டில்லாத காலத்தில், பணக்காரர்களுக்கு மட்டும் - வெறும் 3% மக்களுக்கு மட்டும் ஓட்டுரிமை இருந்த காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் விவாதித்து உருவாக்கப்பட்டது அது.

அதை உருவாக்கியவர்கள் என்னவோ பெரிய நிபுணர்கள்தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், பெரும்பான்மை மக்களின் கருத்துகளை அது புறந்தள்ளிவிட்டதே! விளைவாகத்தானே மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை அது கொண்டிருக்கிறது. காந்தியே அது உருவாக்கப்படும்போது தன் அதிருப்தியைத்தானே வெளியிட்டார்?

கூட்டாட்சி முறையில் அமைக்கப்பட்ட ஒன்றியம் என்று இந்தியாவை நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. ஆனால், மாநிலங்களுக்கு என்ன அதிகாரம் இங்கே இருக்கிறது? ஓர் உதாரணம், ஒளிபரப்பு உரிமை மத்தியப் பட்டியலில் இருக்கிறது. ஏன்? என்ன தேவை? இன்றைக்கு இத்தனை தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் இருக்கின்றன, வானொலி நிலையங்கள் இருக்கின்றன.

ஆனால், மாநில அரசு தொடங்க முடியாது! ஒரு முதலமைச்சரின் உதவிச் செயலாளருக்கு இணையான அதிகாரம்கூடக் கிடையாது அகில இந்திய வானொலி நிலையத்தின் இயக்குநர் பதவிக்கு.

ஆனால், ஒரு முதலமைச்சர் அவசர நிமித்தம் மக்களிடம் உரையாற்ற நினைத்தால், அவரிடம் போய் முதலமைச்சர் அனுமதி கேட்டு நிற்க வேண்டும். இது சரியா? இதுதான் இந்தியாவின் அரசியலமைப்பா என்று நான் கேட்கவில்லை. நேருவையும் படேலையும் பார்த்து பட்டாபி சீதாராமைய்யா கேட்ட கேள்வி இது.

அரசாங்கத்தை மக்கள் நம்பும்போது, மக்களை அரசாங்கம் நம்ப வேண்டும். ஆனால், இந்திய அரசாங்கம் மக்களை நம்ப மறுக்கிறது. அதற்கான சாட்சியமாகவே நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது. அதனால்தான் அண்ணா கேட்டார், “ஏன் மக்களை நம்ப மறுக்கிறீர்கள்?” உள்ளபடி நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் பல பகுதிகள் இன்று செயலிழந்து, செத்துவிட்டன.

ஒரு மாநில அரசு பெரிய துறைமுகம் ஒன்றை நிறுவ வேண்டும் என்று நினைத்தால், இன்றைக்கும் முடியாது. ஏனென்றால், அதற்கான அதிகாரம் மத்தியப் பட்டியலில் இருக்கிறது. ஆனால், அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் துறைமுகங்களை வாரிக் கொடுக்கிறார்களே, எப்படி? எந்த அரசியலமைப்புச் சட்டப்படி இதை நடைமுறைப்படுத்துகிறார்கள்?

ராணுவம், நாணயம், வெளியுறவு இந்த மூன்று துறைகள் சம்பந்தமான அதிகாரங்களைத் தவிர, ஏனைய எல்லா அதிகாரங்களையும் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.

தனிப்பட்ட வகையில் நீங்கள் முன்மாதிரியாக முன்னிறுத்தக் கூடிய அரசியலமைப்புச் சட்டம் எதுவாக இருக்கும்?

திமுக முன்னிறுத்தும் பல விஷயங்கள் தேசிய விவகாரங்கள். ஆனால், ஏன் அவை தேசிய அளவில் அவ்வளவு முக்கியத்துவத்தைப் பெறவில்லை?

(நாளையும் பேசுகிறார் நாகநாதன்...)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x