

‘கடலில் எவ்வளவு உப்பு, மனிதரில் அவ்வளவு தப்பு’ எனும் பின்னட்டை குறிப்பில் வரும் இச்சொற்கள் சமூகத்தில் எப்படியெல்லாம் வினையாற்றுகிறது என்பதை நாராயணி கண்ணகியின் ’ தப்பு’ நாவல் விவரிக்கிறது.
பெரும்பாலும் நாம் அறியாத துறைகள் குறித்து பொதுபுத்தியில் சொல்லப்பட்டவற்றையே உண்மை என நம்புவோம். ஆனால் அங்கு நிலவும் உண்மைத் தன்மை வேறொன்றாக இருக்கும்.
காவல் துறை, அரசு மருத்துவமனையில் இருக்கும் நல்லது கெட்டதுகளை மிக நுட்பமாக நாவல் காட்சிபடுத்துகிறது. மானோன்மணி ஆய்வாளரைப் போன்றோர் உண்மையில் காவல்துறையில் இருக்கலாம், இருப்பார்கள்.
ஆனால் பார்த்தீனியக் காட்டில் முளைத்திருக்கும் பயிர்களைப் போல இருப்பார்கள். எளியவர்கள், மிகுந்த நம்பிக்கையோடு அணுகக்கூடிய இடங்களாக காவல்துறையும், அரசு மருத்துவமனையும் இப்பொழுதும் இருக்கின்றன. குடும்ப பிரச்சினைகள் மனம்விட்டு பேசி ஆறுதல்கொள்ளும் இடமாகவும் காவல்துறை உள்ளது.