

வியட்நாமை பிரான்ஸ் ஆக்கிரமித்திருந்த காலத்தில் அங்கு வாழ்ந்த ஒரு பிரெஞ்சுக் குடும்பத்தைப் பற்றியதுதான் ‘காதலன்’ என்கிற இந்தப் புதினம்.
ஆக்கிரமிப்பாளருக்கே உரிய அதீதமான முன்னெச்சரிக்கை, சமூக மேலடுக்கில் இருக்கும் பெருமிதம், நடுத்தரக் குடும்பத்துக்கு உரிய பொருளாதாரப் பதற்றம், அது சுய பச்சாதாபமாக உருவெடுக்கும் அவலம் எனப் பல்வேறு உணர்ச்சிகள் இந்தக் குடும்பத்தைப் பந்தாடுகின்றன.
துரதிர்ஷ்டவசமாகக் குடும்ப உறுப்பினர்களின் பெரும் பலவீனங்களும் சேர்ந்துகொண்டு வீட்டை ஒரு போட்டிக் களம் போல் ஆக்குகின்றன.
இந்தப் போராட்டத்தால் அக்குடும்பத்தின் பதின்ம வயதுச் சிறுமி, இயல்புக்கு மாறான முடிவுகளை எடுக்க நேர்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அவள் தனது இளமைக்காலத்தை நினைத்துப்பார்ப்பதாகக் கதை கட்டமைக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையை ஒரு சுமையாகவே அணுகிய அவளது அம்மா, அம்மாவின் அன்புக்கு ஒரே பாத்திரமான சுயநல அண்ணன், இதனால் இழப்பாளி ஆக்கப்பட்ட அப்பாவித் தம்பி ஆகியோர் அவளின் நினைவுகளில் நடமாடிக்கொண்டே உள்ளனர்.