Last Updated : 12 Apr, 2014 01:21 PM

 

Published : 12 Apr 2014 01:21 PM
Last Updated : 12 Apr 2014 01:21 PM

பெருகும் வண்ணங்கள்

இந்திய மரபையும், நாட்டார் கலைகளையும், இன்றைய நவீன வாழ்க்கை மாற்றத்தையும் அடிப்படைச் சித்தரிப்பாகக் கொண்டவை இந்திய நவீன ஓவியங்கள். இந்தத் தனித்துவமான அம்சம் இந்திய ஓவியக் கலைக்கு உலக அளவில் தனி அடையாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. அதைப் பிரதிபலிக்கும் வகையில் சென்னை லலித் கலா அகடமியில் Divergent Horizons என்னும் தலைப்பில் ஓவியக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

146 கலைஞர்களின் 145 ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன (சில ஓவியங்கள் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளன). இவை இந்தியாவின் பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த கலைஞர்களின் படைப்புகள். தமிழ்நாட்டைச் சேர்ந்த பெனிட்டா பெர்ஸியாள், அபராஜிதன், பிரசன்னகுமார், வெண்ணிமலை, குமரேசன் செல்வராஜ், இளஞ்செழியன், முரளிதரன் உள்ளிட்ட கலைஞர்கள் பலரின் ஓவியங்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

அரூபச் சித்திரம் (abstract), வாழ்க்கைச் சித்திரம் (figurative), நகரச் சித்தரிப்பு (urban reality), நில அமைப்பு சார்ந்த சித்திரங்கள் (landscapes), விலங்குகள் (animals), சமகால நாட்டார் கலைகள் (folk in contemporary) ஆகிய தலைப்புகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஓவியங்கள், கலைஞர்களின் வெவ்வேறு விதமான அரசியல், அழகியல் அம்சங்களை வெளிப்படுத்துகின்றன.

நகரச் சித்தரிப்பு என்னும் தலைப்பிலான ஓவியங்களில் Blind Poet and Butterflies என்னும் தலைப்பிலான ஓவியத்தில் கண்ணில் துணி கட்டப்பட்ட கவிஞன் கையில் வண்ணத்துப் பூச்சி ஒன்று, ஒரு புத்தகத்தைப் போலச் சிறகடித்துக்கொண்டிருக்கிறது. சுற்றிலும் எழுத்துகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இன்னொரு வண்ணத்துப் பூச்சி ஒன்று ஓவியத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. மூத்த ஓவியர் டக்ளஸின் இந்த ஓவியம், நெருக்கடி வாழ்க்கைக்குள் இருக்கும் ஒரு கலைஞனைச் சித்தரிக்கிறது.

வேணுகோபாலின் ஓவியம் மின்சார ரயிலின் கைபிடிகளைப் பற்ற முயலும் கைகளைச் சித்தரிக்கிறது. மெலிந்த, வலுவான, முரட்டுத்தனமான எனப் பலவிதமான கைகள் அந்த ஓவியத்தில் உயர்ந்துள்ளன. கைகளுக்கும் கைப்பிடிக்குமான இடைவெளியின் அயற்சியையும் ஓவியம் சித்தரிக்கிறது. ஒரு கை வெறும் காற்றைப் பிடித்து நிற்கிறது.

சமகால நாட்டார் கலைகள் என்னும் தலைப்பிலான ஓவியங்கள் நாட்டார் கலைஞர்களின் ஒத்துழைப்புடன் வரையப்பட்டுள்ளன. பெனிட்டா பெர்ஸியாளின் ஓவியம், படுவா ஓவியக் கலைஞர்களான கது சித்திராகர், ராதா சித்திராகர் ஆகியோரின் பங்களிப்புடன் விரிந்துள்ளது. சுனாமி என்னும் தலைப்பிலான இந்த ஓவியம் மீனுக்குள் கடலும் கடலுக்குள் மீனும், மீனுக்குள் மொத்த வாழ்வும் இருப்பதைச் சித்தரிக்கிறது.

தொடர்ந்து நீலத்தைத் தன் ஓவியத்தில் வெளிப்படுத்திவரும் அபராஜிதனின் Keeper of the Flame என்னும் ஓவியம் மழை பெய்யும் ஒரு கடற்கரையைக் குடையுடன் சித்தரிக்கிறது. கடலும் கரையும் தத்ரூபமாக எழுந்துள்ள இந்த ஓவியத்தில் மழையும் குடையும் நிழல் கோடுகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. நில அமைப்பு சார்ந்த சித்திரங்களில் அபராஜிதனின் இந்த ஓவியம் சிறந்த அனுபவத்தை அளிக்கிறது. விலங்குகள் தலைப்பிலான ஃபய்த் ரசீத் கானின் childhood memories of cows ஓவியம் கவனத்தை ஈர்க்கிறது.

145 ஓவியங்களையும் தனித் தனியாக விமர்சிப்பதும் விளக்குவதும் எளிய காரியமல்ல. இந்த ஓவியங்கள் அனைத்தும் காலம் தாண்டிய அங்கீகாரத்தையும் உற்சாகத்தையும் கலைஞர்களுக்கு அளிக்கும்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x