Published : 12 Jan 2014 12:00 AM
Last Updated : 12 Jan 2014 12:00 AM

‘தி இந்து’ இலக்கியத் திருவிழா தொடங்கியது

சென்னையில் தொடங்கிய ‘தி இந்து’ இலக்கியத் திருவிழாவில், இயற்கையின் சிறப்புகளை தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு போற்றுகின்றன என்பதை இயல், இசை, நடன வடிவில் சித்தரித்துக் காட்டினர்.

‘வாழ்வுக்கான இலக்கியம்’ (Lit for Life) என்ற தலைப்பில் ‘தி இந்து’ நாளிதழ் நடத்தும் 4-ம் ஆண்டு இலக்கியத் திருவிழா, சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

தொடக்க விழாவில் ‘தி இந்து’ முதன்மை ஆசிரியர் என்.ரவி பேசியதாவது:

‘தி இந்து’ நாளிதழின் லிட்டரரி ரிவ்யூ பகுதியின் 20-ம் ஆண்டை கொண்டாடும் வகையில் 2010-ம் ஆண்டு இலக்கியத் திருவிழா (Lit for Life) முதலில் நடத்தப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா நடந்து வருகிறது. எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் வாசகர்கள் தங்கள் எண் ணங்கள் மற்றும் அனுபவங்கள் குறித்து ஒருவரோடு ஒருவர் நேரிடையாக உரையாடுவதற்கான வாய்ப்பை இந்த இலக்கியத் திருவிழா ஏற்படுத்தித் தருகிறது என்றார்.

கே.எஸ்.எல். குழுமத்தின் இயக்குநர் நிர்மலா லஷ்மணன் பேசும்போது, ‘‘மனிதர்களின் மிக மேம்பட்ட வாழ்க்கைக்கான அடித்தளமாக விளங்குவது இலங்கியங்களே. அதனால்தான் நூல்கள், இலக்கிய விமர்சனங்கள், எழுத்தாளர்கள், மொழிபெய்ர்ப்பு போன்றவற்றுக்கு ‘தி இந்து’ எப்போதுமே முக்கியத்துவம் அளிக்கிறது. அந்த வகையில் எழுத்துக்களை கொண்டாடவும் எண்ணங்களை பரிமாறிக் கொள்ளவும் வாசகர்கள் – எழுத்தாளர்கள் இடையே நேரடி பிணைப்பை உருவாக்கவும் இந்த இலக்கியத் திருவிழா பெரும் உதவியாக அமையும்’’ என்றார்.

தொடக்க விழாவில் ஹிரநந்தனி குழுமத்தின் பொது மேலாளர் (மார்க்கெட்டிங்) பிரசாந்த் மிர்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இயல், இசை, நடனம்

சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, நாலாயிர திவ்ய பிரபந்தம், பாஞ்சாலி சபதம், சா.கந்தசாமியின் ‘சாயாவனம்’ நாவல், பெருமாள் முருகனின் ‘கூளமாதாரி’ நாவல் என சங்கத் தமிழ் நூல்கள் தொடங்கி நவீன இலக்கிய நூல் கள் வரையில் சிறு வண்டுகள், பறவைகள், வண்ணத்துப் பூச்சி கள், விலங்குகள், வனங்கள், ஆறுகள், நில அமைவுகள் என இயற்கையின் வளமும் வனப்பும் எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளன என்பதை எழுத்தாளர் கே.ஆர்.ஆறு

முகம், திரைப்பட நடிகை ரோகிணி ஆகியோர் தமிழில் வாசித்தனர்.புகழ்பெற்ற நடனக் கலைஞர் அனிதா ரத்னம், நாடகக் கலைஞர் பி.சி.ராமகிருஷ்ணா, மூத்த பத்திரிகையாளர் சுசீலா ரவீந்திரநாத் ஆகியோர் அவற்றின் நேர்த்தி மிகுந்த ஆங்கில மொழிபெயர்ப்பை அழகியலோடு வாசித்தனர். இயற்கையின் வனப்பை பார்வையாளர்கள் மத்தியில் காட்சிகளாய் இந்த வாசிப்புகள் கொண்டு வந்தன.

நடனக் கலைஞர் அனிதா ரத்னம், தனது நடனம் மூலம் அந்தக் காட்சிகளை விவரித்தார். கர்நாடக இசைக்கலைஞர் ரேவதி குமார், கர்நாடக இசைப் பாடல்கள் வடிவில் இயற்கையின் சிறப்புகளை பாடிக் கொண்டே அனிதா ரத்னத்துடன் சேர்ந்து நடனமாடினார். அதேபோல் நடிகை ரோகிணியும் தான் வாசித்த காட்சிகளை நடன வடிவில் விவரித்தார்.

மேலும், ‘தி ஒயிட் டைகர்’ என்ற நாவலுக்காக புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் அரவிந்த் அடிகா மற்றும் சர்வதேச இலக்கிய முகவர் டேவிட் காட்வின் இடையேயான உரையாடல், கவிஞர் குல்சார் – எழுத்தாளர் பவன் கே.வர்மா இடையேயான உரையாடல் உள்பட பல நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x