Last Updated : 07 Nov, 2013 12:00 AM

 

Published : 07 Nov 2013 12:00 AM
Last Updated : 07 Nov 2013 12:00 AM

ஏழைகளுக்கு இங்கே புத்தகங்கள் இலவசம் - தூத்துக்குடியில் ஒரு புத்தக வங்கி

ஒரு நாள் “புத்தகம் கேட்டு வரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. ஆனால், அத்தனை பேருக்கும் எங்களால் உதவ முடியவில்லை. முக்கியப் பிரமுகர்கள் இந்த நல்ல முயற்சிக்கு நிதி கொடுத்து உதவுவார்களேயானால் அதுவே எங்களது முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்”.

தூத்துக்குடி தெற்கு காட்டன் சாலையில் சென்று கொண் டிருந்தபோது, அந்த பழமையான கட்டிடத்திலிருந்து மாணவிகள் புத்தகமும் கையுமாய் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். புத்தகக் கடை ஏதும் இருக்குமோ என்று எட்டிப் பார்த்தால், அங்கே 17 ஆண்டுகளாக புத்தக வங்கி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருப்பதைச் சொன்னார்கள்.

புத்தக வங்கியைத் தொடங்கிய பொன்னுசாமிக்கு இப்போது வயது 84. தூத்துக்குடி பகுதியில், புத்தகம் வாங்கிப் படிக்க வசதியில்லாத கல்லூரி மாணவர்களுக்கு இந்தப் புத்தக வங்கியில் இலவசமாக புத்தகங்களை வழங்குகிறார்கள். படிப்பு முடிந்ததும் அந்தப் புத்தகங்களை திரும்பப் பெற்று அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்குகிறார்கள்.

’’இதுவரை இந்த புத்தக வங்கியின் மூலம் 1,766 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். கொடுத்து உதவிய புத்தகங்களின் மதிப்பு சுமார் ரூ. 9.37 லட்சம். தற்போது வங்கியில் உள்ள மொத்தப் புத்தகங்கள் மூவாயிரம்’’ பெருமையாய் சொல்கிறார் பொன்னுசாமி.

“எனக்கு ஆறு குழந்தைகள். உப்பு வியாபாரத்தில் இருந்த நான், அத்தனை பிள்ளைகளுக்கும் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுக்க முடியாமல் திணறியதுண்டு. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நமக்கே இவ்வளவு சிரமம் என்றால், ஏழைகள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று யோசித்தேன். அதில் வந்ததுதான் இந்தப் புத்தக வங்கி.

எனக்கு சொந்த ஊர் கீழ ஈரால். தூத்துக்குடியில் வசிக்கும் கீழ ஈரால் மக்களின் நலனுக்காக, 1974-ல் கீழ ஈரால் நாடார்கள் மகமை அறக்கட்டளையைத் தொடங்கி அதற்கு செயலாளரானேன். அந்தச் சமயத்தில், மகமை உறுப்பினர் ஒருவரின் மகனுக்கு கல்லூரியில் படிக்க புத்தகங்கள் வாங்குவதற்காக மகமையின் உதவியை நாடினார். மகமை உறுப்பினர்கள் அனைவரும் பணம் போட்டு புத்தகங்களை வாங்கிக் கொடுத்தோம். புத்தக வங்கி தொடங்குவதற்கு அதுதான் உந்துதல்!

ரூ.13 ஆயிரம் முதலீட்டில்…

மகமை உறுப்பினர்கள் அனைவரது சம்மதத்துடன் 1996-ல் புத்தக வங்கியைத் தொடங்கினோம். மகமை கையிருப்பு ரூ. 13 ஆயிரத்தை அப்படியே போட்டு புத்தகங்களை வாங்கினோம். அதன் மூலம் முதல் ஆண்டு 7 மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினோம். அது படிப்படியாக வளர்ந்து இந்த ஆண்டு 123 மாணவ - மாணவியர்களுக்கு புத்தகங்களை வழங்கியுள்ளோம்.

புத்தகம் கேட்டு வரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. ஆனால், அத்தனை பேருக்கும் எங்களால் உதவ முடிய வில்லை. முக்கியப் பிரமுகர்கள் யாரும் இந்த நல்ல முயற்சிக்கு நிதி கொடுக்கத் தயாரில்லை. மகமை உறுப்பினர் முத்துக்கனி கொடுத்த ரூ.1 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்து, அதில் கிடைக்கும் வட்டியில் ஆண்டுதோறும் புதிய புத்தகங்களை வாங்கி வைக் கிறோம். முதலில் மகமை உறுப்பினர்க ளின் குழந்தைகளுக்கு மட்டுமே உதவினோம். இப்போது அனைத்து ஏழைக் குழந்தைகளுக்கும் உதவி வருகிறோம்’’ என்றார் பொன்னுசாமி.

மருத்துவர்கள், பொறியாளர்கள்…

இந்தப் புத்தக வங்கியில் புத்தகங்களை வாங்கிப் படித்தவர்களில் சிலர் மருத்து வர்களாகவும் பொறியாளர்களாகவும் இருக்கிறார்கள். சென்னை உள்ளிட்ட இடங்களில் இதுபோன்ற புத்தக வங்கி கள் இருந்தாலும் அங்கெல்லாம் குறிப் பிட்ட தொகையை முன்பணமாக வாங்கிக் கொண்டுதான் புத்தகங்களை கொடுக் கிறார்கள். ஆனால், இங்கே அப்படி எந்தப் பணமும் வாங்கப்படுவதில்லை.

“எனக்குப் பிறகு இந்த புத்தக வங்கியை செம்மையாக நடத்துவதற்கு இளைஞர்கள் முன்வரவேண்டும். தூத்துக்குடி மாநகரம் மட்டுமின்றி, மாவட்டம் முழுமைக்கும் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்குமளவுக்கு இந்தப் புத்தக வங்கி ஆல் போல் தழைக்க வேண்டும்’’ பொன்னான வார்த்தைகளில் நமக்கு விடைகொடுத்தார் பொன்னுசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x