Published : 27 Apr 2019 08:42 AM
Last Updated : 27 Apr 2019 08:42 AM

360: சலூன் நூலகருக்கு ‘புத்தகர்’ விருது

அப்பாவின் கதையை இயக்கும் ஹரி பிரசாத்

பெண்கள் கிரிக்கெட் விளையாடுவது குறித்து இயக்கிய குறும்படத்தை அடுத்து, இப்போது ‘மை டியர் செகாவ்’ எனும் தன் இரண்டாவது குறும்படத்தோடு களமிறங்கியிருக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் மகன் ஹரி பிரசாத். பொது இடங்களில் நின்றுகொண்டு செகாவ் கதைகளை வாசித்துக்காட்டும் ஒரு அதிசயப்பிறவியைப் பற்றிய படம் இது. வாசிப்பின் மகத்துவம் பேசும் இக்குறும்படம் எட்டு நிமிடங்கள் ஓடக்கூடியது. சிஐடி நகரிலுள்ள கவிக்கோ மன்றத்தில் நாளை (ஏப்ரல் 28) மாலை 6 மணிக்கு இக்குறும்படத்தை இயக்குனர் சீனுராமசாமி வெளியிட இயக்குனர் ராஜு முருகன் பெற்றுக்கொள்கிறார். கூடவே, ஆன்டன் செகாவின் சிறுகதைகள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் இலக்கியப் பேருரை நிகழ்த்துகிறார்.

மே தின புத்தகத் திருவிழா

தேனாம்பேட்டையிலுள்ள பாரதி புத்தகாலயத்தில் ஏப்ரல் 27 முதல் மே 5 வரை புத்தகத் திருவிழாவை ஏற்பாடுசெய்திருக்கிறார்கள். டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் ஒவ்வொருநாளும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். பாரதி புத்தகாலயத்தோடு அலைகள், விடியல், சிந்தன் உள்ளிட்ட பதிப்பகங்களின் இடதுசாரிப் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 10-50% தள்ளுபடியில் புத்தகங்கள் வாங்கிக்கொள்ளலாம்.

சென்னையில் புத்தகக்காட்சி

மக்கள் வாசிப்பு இயக்கம் நடத்தும் சென்னை புத்தகக்காட்சி ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 29 வரை மடிப்பாக்கத்திலுள்ள ஸ்ரீ கணேஷ் மகாலில் நடைபெறுகிறது. ஐந்து லட்சம் தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. 10% தள்ளுபடி.

சலூன் நூலகருக்கு ‘புத்தகர்’ விருது

நூல் வாசிப்பு மற்றும் நூலக வளர்ச்சிக்குப் பங்காற்றுபவர்களை அடையாளம் கண்டு ஆண்டுதோறும் உலக புத்தக நாளில் ‘புத்தகர்’ விருது வழங்கிவருகிறது சென்னை புத்தகச் சங்கமம். அதன்படி, கடந்த 23 அன்று பா.பெருமாள், பொன்.மாரியப்பன் ஆகியோருக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விருது வழங்கிப் பாராட்டினார். பா.பெருமாள் 1960 முதல் தமிழ்நாடு கல்லூரி நூலகர் சங்கத் தலைவராகப் பணியாற்றிவருபவர். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள பொன். மாரியப்பன், குடும்பத் தொழிலான முடிதிருத்தும் தொழில் செய்துவருபவர். புத்தக வாசிப்பு மீது ஏற்பட்ட ஆர்வத்தை மற்றவர்களுக்கும் கடத்தும் விதமாகத் தனது சலூனிலேயே ஒரு நூலகத்தையும் நடத்திவருகிறார்.

நூலகம் சென்றால் பரிசு

பொது நூலகத்துக்குச் செல்லும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில், உலக புத்தக நாளன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார் எழுத்தாளர் ரவிக்குமார். ‘உலக புத்தக நாளான இன்று உங்கள் அருகில் உள்ள பொதுநூலகம் ஒன்றுக்குச் செல்லுங்கள். அங்கிருந்து ஒரு செல்ஃபி எடுத்து இங்கே பின்னூட்டமிடுங்கள். உங்களுக்கு புத்தகம் ஒன்றை அன்பளிப்பாக அனுப்பிவைக்கிறேன்’ என்ற அவரது வேண்டுகோளை ஏற்று நிறைய பேர் புகைப்படம் அனுப்பினார்கள். 50 பேரைத் தேர்ந்தெடுத்து புத்தகங்களை அனுப்பிவைத்தார் ரவிக்குமார்.

தொகுப்பு: கே.கே.மகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x