Last Updated : 12 Jul, 2018 09:32 AM

 

Published : 12 Jul 2018 09:32 AM
Last Updated : 12 Jul 2018 09:32 AM

மரணம் ஒரு கலை 19: பதினான்காம் நாள் நிலவு

குரு தத்

ரண்டரை வயது மகளுக்காக தேக்கி வைத்த முத்தங்கள் அன்பின் ஈரத்துடன் இருக்கின்றன. கனவில் இருந்த காட்சிகள் திரைச்சுருள்களாக மாறக் காத் திருந்தன. பருகிய கடைசி மது நஞ்சாகி உயிரை பறித்துக்கொண்ட துயரத்தில் கசந்தபடி இருந்தது.

துயரமும் உதட்டுச் சுழிப்பும், இரண்டு மூன்றாய் மடியும் புருவ முமாக இளமை பூரிக்கும் குரு தத், மறைந்து 57 ஆண்டுகள் கடந்த பிறகும் இன்னும் வாழ்ந்து முடிக்காத நாட்களின் துயரங்களுடன் உறைந்த அவரின் இறந்த காலத்திலேயே நின்றுகொண்டிருக்கிறார்.

எழுதி முடித்து மீட்டப்படாத இசைக்குறிப்புகளின் துயர மௌனத்துடன் அவரின் நாட்கள் மீதம் இருக்கின்றன.

அவர் நடித்து, பாதியில் நின்ற காட்சி வேறொரு நடிகரால் நடித்து முடிக்கப்பட்டுவிட்டது. அவர் இயக்கிப் பாதியில் நின்ற படம், வேறொரு இயக்குநர் ‘கேமரா ரோல்... கட்’ சொல்லி வெள்ளித் திரைக்கு வந்துவிட்டது. வேறெவராலும் இட்டு நிரப்பமுடியாமல் குரு தத்தின் மூன்று குழந்தைகளுக்கான அன்பும் பாதுகாப்பும் நிராதரவாக அங்கேயே இருக்கின்றன.

39 வயதில் மதுவுடன் சேர்த்து தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு இறந்து போகலாம் என குரு தத் முடிவெடுத்த தருணம் அவர் இந்தியாவின் முதன்மை யான இயக்குநர். அற்புதமான நடிகர். கலையம்சம் பொருந்திய படங்களை வெகுஜன வெற்றியாக்கியவர். பாடல் காட்சிக்குஎன்றே தனி கலையழகை திரை யில் கொண்டுவந்த முன்னோடி கலைஞன்.

எல்லாவற்றையும் பின்னுக் குத் தள்ளி மரணத்தின் கைகளில் தன்னை ஒப்படைத்துக்கொள்ள அவரைத் தூண்டியது எது? மனைவியுடனான வாக்குவாதங்களா? எப்போதும் தன்னை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுத் திய சுய இரக்கமா?

இரண்டரை வயது மகளை அந்த நள்ளிரவில் மனம் தேடி, பார்க்க இயலாமல் போன பரி தவிப்பா? 3 முறை தற்கொலை காட்சியை முயன்று தோற்றுப் போன அந்த உன்னதக் கலைஞன், 4-வது முறை தன்னுடைய இறுதிக் காட்சியை சரியாகவே இயக்கிக்கொண்டார்.

25 வாரங்கள் ஓடிய ‘பாஸி’ படத்தை இயக்கியபோது குரு தத்தின் வயது 26.

ஒவ்வொரு முறையும் பெரிய கதாநாயகர்களுக்காக காத்திருக்கும் அவஸ்தையில் இருந்து வெளிவர விரும்பினார் தத். பொருளாதார காரணங்களுக்காகவும், இயக்குநரின் நடிகராக கதாநாயகர்கள் இருக்க வேண் டும் என்ற தேடலாலும், குரு தத் தன்னுடைய படங்களில் தானே நடிக்கத் தொடங்கினார். ஒரு நடிகராக அவர் தன்னை உரு வாக்கிக்கொண்டார்.

நினைத்தால் நினைத்தவுடன் செய்ய வேண்டும் அவருக்கு. தமிழிலும் தெலுங்கிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ‘மிஸ்ஸியம்மா’ திரைப்படத்தை ரீமேக் செய்ய நினைத்த குரு தத், படத்தை உடனே பார்த்தாக வேண்டும் என ஹைதராபாத் கிளம்ப நினைக்கிறார். விமானம், ரயில் எதிலும் டிக்கெட் கிடைக்கவில்லை. ஒருநாள் கூட பயணத் திட்டத்தைத் தள்ளிப் போடாமல், தன்னுடைய பிளைமவுத் காரிலேயே பம்பாயில் இருந்து ஹைதராபாத்துக்கு வருகிறார். 18 மணி நேரப் பயணம். படம் பார்க்கிறார். அவருக்கு ‘மிஸ்ஸியம்மா’ பிடிக்கவில்லை. எனவே அந்தத் திட்டம் கைவிடப்படு கிறது. அந்தப் பயணத்தில்தான் தெலுங்குப் படமொன்றில் நடித்திருந்த வஹிதா ரஹ்மானை சந்திக்கிறார். செங்கல்பட்டுதான் வஹிதாவின் பூர்வீகம். குரு தத் தன்னுடைய ‘சி.ஐ.டி’ படத்தில் வஹிதாவை அறிமுகம் செய்தார். தென்னகத்தில் இருந்து இந்தி சினிமாவுக்குச் சென்று முதன்முதலில் பெரும் புகழ்பெற்றவர் வஹிதா.

அன்பும் புரிதலும் கூடிய குடும்ப வாழ்க்கைக்காக ஏங்கி னார் தத். தன்னுடைய படத்தில் பின்னணி பாட வந்த கீதா ராயை திருமணம் செய்துகொண்டார். தான் பிறந்த தினமான ஜூலை 9-ம் தேதியே தனக்கொரு மகனும் பிறந்தவுடன் குரு தத்துக்கு அளவில்லா மகிழ்ச்சி.

அழகும் உருக வைக்கும் குரல்வளமும் கொண்ட கீதாவுட னான வாழ்க்கையில் ஏனோ அபஸ்வரம் போன்ற சந்தேகம் நுழைந்தது. துயரப் பாடல்களைப் பாடுவதில் பெயர் பெற்ற கீதாவின் வாழ்க்கையும் ஒரு சோக கீதமானது.

இந்தியப் பெண்களுக்கே உரிய பாதுகாப்பற்ற உணர்வு கீதாவுக்குள்ளும். தன் கணவ னைப் பொக்கிஷமாக காக்க அவர் நடந்து கொண்ட விதங்கள் மென்மையான மனம்கொண்ட குரு தத்தை மேலும் பாதித்தன. தன் உணர்வுகளை வெளிப் படையாக காட்டிக் கொள்ளத் தெரியாத குரு தத்தை, கீதாவின் பின்தொடரும் பார்வைகளும் குறுக்கு விசாரணைகளும் அந் நியப்படுத்தின.

தன்னுடைய கனவுப் படமான ‘பியாசா’வை உருவாக்கும்போதே கீதாவுக்கும் குரு தத்துக் கும் கருத்து வேறுபாடுகள் முளைவிட்டன. கலையின் உச்சத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டிருந்த நேரத்தில் குரு தத் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு முதன்முறையாக தற்கொலைக்கு முயன்றவர், 3 நாட் கள் கோமாவில் இருந்தார்.

குடும்பத்தின் சச்சரவுகளில் இருந்து தப்பிக்க குரு தத் தனிமைக்குள் மூழ்கினார். பிடித்த இசை, பிடித்த புத்தகம், பிடித்த நண்பர்கள், பிடித்த தோழிகள் என எதில் மனம் செலுத்தினா லும் அவரால் தனிமையின் கொடுங்கரத்தில் இருந்து மீளவே முடியவில்லை.

ஜோதிடத்தில் ஆழமான நம்பிக்கைக் கொண்டது குரு தத்தின் குடும்பம். சிறுவயது முதல் ஜோதிடர் கூறிய எல்லாமே தன் வாழ்வில் நடந்ததை குரு தத் அனுபவத்தில் உணர்ந்திருந்தார்.

‘32 வயதில் பைத்தியம் பிடிக் கும்’ என்று ஜோதிடர் கூறியது உண்மையாகுமோ என்ற எண் ணம் தனிமையில் மனம் ஒடிந்திருக்கும் நேரங்களில் குரு தத்துக்கு அச்சமூட்டியிருக்கலாம்.

குரு தத்தின் பெரும்பான்மை யான நாட்கள் வங்காளத்தில் தான் கழிந்தன. தந்தை சிறந்த படிப்பாளி. இசை ஆர்வம் கொண்டவர். ஆனால் எதையும் வெளிப்படுத்தும் ஆர்வமின்றி தனக்குள் தான் ஒடுங்கிக்கொள்பவர். தாயோ ஆர்ப்பாட்டமான குண இயல்பும், வேகமும் கொண்டவர். குரு தத்தின் தாயார் 5 மொழிகள் அறிந்தவர். குரு தத் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஆங்கில வழிக் கல்வி என்பதால் ஆங்கிலத்தில் திரைக்கதை அமைக்கும் அளவுக்குத் தேர்ந்தவர்.

சிறுவயதிலேயே கலையின் மேல் கொண்ட ஆர்வத்தினால், நாட்டியக் கலைஞர் உதய்சங்கர் நடத்திய அல்மோரா என்ற நிகழ்கலை மையத்தில் சேர்ந்து நடனம், நாடகம், இசை மூன்றும் பயின்றார். கலையின்மேல் தீரா ஆர்வம் கொண்ட குரு தத், பாலிவுட்டில் நடன இயக்குநராக அறிமுகமாகி, இயக்குநராகி, நடிகராகி, தயாரிப்பாளராகி, ஒளிர்ந்தபடியே மரித்துப்போன எரி நட்சத்திரமானார்.

“இப்படியொரு அழகான பிணத்தை நாங்கள் பார்த்ததே இல்லை” என்று நண்பர்கள் குரு தத்தின் மரண முகத்தைப் பார்த்து தாங்கவே முடியாமல் கலங்கி நின்றார்கள்.

‘‘நீங்கள் சாப்பிடுங்கள். மிக வும் களைப்பாக இருக்கிறது. தூங்கப் போகிறேன்” என்று தன் அறைக்குள் சென்ற குரு தத் இறக்கும்போதுகூட சிந்திப்பதைப் போலவே ஆள்காட்டி விரலை முகவாயில் வைத்து இருந்தாராம்.

- வருவார்கள்...

எண்ணங்களைப் பகிர:vandhainila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x