திராவிடத்தை விமர்சிக்கும் நாவல் | நூல் வெளி

திராவிடத்தை விமர்சிக்கும் நாவல் | நூல் வெளி
Updated on
2 min read

சிவராமன் என்னும் ஒரு கதாபாத்​திரத்​திற்கு, ராஜா என்கிற ஒரு கதாபாத்​திரம், ‘ஏழு பேர்’ என்ற நாவலைக் கல்யாணப் பரிசாகத் தருவதாக அமைகிறது இந்த நாவல். சிவராமன், ராஜா (கதைசொல்லி), கமலா, அசட்டு அண்ணாமலை, சின்னப் பிள்ளை ராமசாமி, கோதண்ட ராம நாயுடு, அவள் (லீலா) ஆகிய ஏழு பேர் பற்றிய கதைகள்தான் இது.

கிட்டத்தட்ட 80 வருடங்கள் கழித்து, தற்போது மறுபதிப்பு கண்டுள்ள இந்த நாவல், இப்போதைய சூழலுக்குத் தேவையானது. ஏனெனில், இன்றைய நவீன திராவிடம், சமத்து​வத்​தையும் சீர்திருத்​தத்​தையும் வெகுவாகப் பரப்பிக் கொண்டிருக்​கிறது. மொழியிலும் கலாச்​சா​ரத்​திலும் பண்பாட்​டிலும் இன்றைய திராவிடம், வணிக நோக்கிலான சித்தாந்​தத்தை முன்வைத்​துள்ளது. இன்றைய திராவிடச் சித்தாந்​தவா​திகள் பலர், சினிமா தயாரிக்​கிறார்கள்; சாராயம் காய்ச்​சுகிறார்கள்; பிறமொழிக் கலப்பை உருவாக்கி நவீனமாக்கு​கிறார்கள்.

இவற்றையெல்லாம் க.நா.சு 1946இல் எழுதி இருப்பது ஆச்சரியம் தருகிறது. லீலா என்கிற பாலியல் தொழிலாளி வீட்டிற்கு, ஊரே போய் வர விரும்​பு​கிறது. தெருவே அசிங்​க​மாகி​விட்டது என்று சொல்லும் ஒரு கதாபாத்​திர​மும், லீலா உடன் ஓர் இரவு தங்க ஆசைப்​படு​கிறது. நல் ஒழுக்கம் கொண்ட ஒரு மனிதனுக்குப் பிறந்த சின்னப் பிள்ளை ராமசாமி அங்கேயே தங்கி​விடு​கிறார். கெட்ட சகவாசங்​களைக் கொண்ட, பெரியப்​பா​விற்குப் பிறந்த, சின்ன பிள்ளையின் அண்ணன், ஒழுக்​கவா​தியாக இருக்​கிறார். பொதுச் சொத்தில் இருந்து, சின்னப் பிள்ளைக்குத் தர வேண்டிய சொத்தை இன்னும் அவர் பிரித்துத் தரவில்லை.

லீலாவின் வீட்டிற்கு வந்து செல்லும் மேல் குறிப்​பிட்ட ஆறு கதாபாத்​திரங்​களும், நகர மனிதர்​களின் குறியீடுகள். யாரெல்லாம் லீலாவின் வீட்டை வெறுக்​கிறார்களோ, அவர்கள் எல்லாரும் ஓர் இரவில் தங்க ஆசைப்​படு​பவர்களாக இருக்​கிறார்கள். ‘ஒரு முத்தம் கொடுத்​தால்தான் விடுவேன்’ என்று, லீலாவின் குட்டிப் பாப்பா கமலாவிடம் சொல்கிறான் ராஜா. கமலா தரும் முத்தத்தை, லீலாவின் முத்த​மாகவே நினைக்​கிறான் ராஜா.

ராஜாவின் இந்தத் தன்மையைத் தோல் உரித்துச் சொல்கிறாள் ராஜாவின் மனைவி ராஜி. ராஜியின் வீட்டுக்கு அவ்வப்போது வந்து காப்பித்தூள் கேட்கும், நாளிதழ் கேட்கும் சிறுமி கமலா, ‘சார், ஒரு முறை வீட்டுக்கு வாங்களேன்’ என்று கூப்பிடு​கிறாள். இவர்கள் வழியாக, இதுதான் சமூகம் என்று கூறுகிறார் க.நா.சு. நாவலின் கதை முக்கியமல்ல. நாவலில் வரும் கதாபாத்​திரம் தனக்குத் தானே சுய சிகிச்சை செய்து​ கொள்​கிறது.

திண்ணையில் அமர்ந்​தபடி, எட்டு நாள்களாக, லீலாவின் வீட்டுக்கு வந்து​போவோரைப் பார்த்துக் கொண்டிருக்கும் ராஜாவின் மனதில் லீலாவும் அமர்ந்​து​விடு​கிறார். சாதாரணமான மக்களைவிட தான் எவ்வளவு மேம்பட்டவன் என்று இதுகாறும் ராஜா உற்றிருந்த தற்பெருமை, தகர்ந்து கொண்டிருக்​கிறது. தனக்குள் கீழ்ப்பட்ட ஒரு தத்துவம் தன்னுள்ளே பதுங்கி உள்ளதை இந்த எட்டு நாளில் ராஜா அறிந்​து​கொள்​கிறான். அறிவு புதுசாகப் பயத்தையும் சஞ்சலத்​தையும் தருகிறது என்கிறார் க.நா.சு. ஒரு கட்டத்​தில், இந்தச் சமூகத்தில் பாலியல் தொழிலா​ளிகள் வாழ உரிமை உண்டு என்று குறிப்​பிடும் ராஜா, லீலாவை அக அழகுகள், அக அமைதிகள் கொண்ட ஒரு பெண்ணாகவே பார்க்​கிறான்.

நாட்டுக்கு நல்லது சொல்கிறேன் என்று சொல்பவனை ஒரு கரடியாகவே பார்க்​கிறார் க.நா.சு. ‘நாட்டுக்கு, சமூகத்​துக்கு நல்லது சொல்பவன், இது நல்லது, இது நல்லது என்று எவ்வளவு மேடைகளில் கரடியாகக் கத்தினாலும் சரி - அது பலிப்​ப​தில்லை. நாட்டுக்கு நல்லது செய்வது இப்படித்தான் என்று அவன் வாழ்ந்து காட்டி​னானால், அவனைப் பின்பற்ற இரண்டொருவர் வருவார்கள். அடுத்த தலைமுறையில் இந்த இரண்டொருவர் தொகை இருபது, நாற்ப​தாகப் பெருகலாம்.

கடைசியில் ஒரு நாள் நாட்டுக்கு நல்லது விளைந்​து​விடலாம். சமூகச் சீர்திருத்​தத்தின் அடிப்​படையான தத்துவமே இதுதான். இதை மறந்து​விட்டு, சமூகச் சீர்திருத்​தக்​காரர்கள் சீர்திருத்தம், சீர்திருத்தம் என்று மேலே இருந்து இல்லாத அழுத்தம் கொடுத்துக் கரடியாகக் கத்துவது லாபம் இல்லாத விஷயம்​தான்’ என்ற உரையாடலை முன்வைக்​கிறது நாவல்.

மறுமணம், கலப்பு மணம் ஆகியவற்றுக்கு இடையே, நம் சமூகம் ஏன் பாலியல் தொழிலா​ளிகளை உருவாக்கி இருக்​கிறது. அவர்களுக்கு இந்தச் சித்தாந்தம் என்ன செய்யப் போகிறது என்று இந்த வாழ்வை எளிமை​யாகக் கேள்வி கேட்கும் க.நா.சு, சித்தாந்​தத்​துக்கு / ஓர் இயக்கத்​திற்கு எதிராக ஒரு நாவலை எழுதி​யிருக்​கிறார். க.நா.சு.வின் முதல் அரசியல் நாவலாக இதைக் கொள்ளலாமா என்று தெரிய​வில்லை. நவீன திராவிடச் சிந்தனையை​யும், பண்பாட்டு மையத்​தையும் கேள்வி கேட்கும் நாவல்கள், தமிழில் எப்போது எழுதப்​படும் என்று தெரிய​வில்லை.

இந்த நாவலில், ஓர் இடத்தில் கலையைப் பற்றி ஒரு குறிப்பு வருகிறது: ‘கலையை மறைப்​பதுதான் கலை’ இந்த நாவல் உள்ளுக்​குள், தற்போதைய திராவிட மாயைகளின் கதைகளைச் சொல்லாமல் சொல்கிறது. அன்று ஆரிய மாயை என்றார் அண்ணா. இப்போதைய சூழல், திராவிட மாயையாக மாறி இருக்​கிறது. இந்த நாவலை யாரெல்லாம் வாசிக்​கிறார்களோ அவர்களெல்​லாம், இந்தத் திராவிட மாயைகளின் போலித்​தனத்தை, இன்றைய சூழலில், தன்னை மீறிப் பொருத்திப் பார்ப்​பார்கள். பொருத்திப் பார்க்கச் செய்து​விடும்.

இந்த நாவலின் வழியே, மேதைமையற்ற மேதைமையாக அமர்கிறார் க.நா.சு. ஒவ்வொரு​வரும் தன்னைத் திருத்​திக்​கொள்​வதுதான் சீர்திருத்தம் என்று சொல்லாமல் சொல்கிறார். இந்த நாவலை, இப்போதைய சூழலில் வாசிக்​கும்​போது, இன்றைய சூழலில் ஒலிக்கும் சமத்துவச் சிந்தனைகள் மேல், பண்பாட்டு மையங்கள் மேல் நிறைய கேள்வி​களும் தோன்றத்தான் செய்கின்றன. ஏழு பேர், ஏழு விதம். பிரபஞ்​சமும் அப்படி​த்தான்​.

ஏழு பேர் (நாவல்)
க.நா.சுப்ரமண்யம்
எழுத்து பிரசுரம்,
விலை: ரூ.140
தொடர்புக்கு: 89250 61999

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in