Published : 03 Dec 2017 10:46 AM
Last Updated : 03 Dec 2017 10:46 AM

விடுபூக்கள்: இன்குலாப் படைப்புகள் வெளியீடு

இன்குலாப் படைப்புகள் வெளியீடு

விஞர் இன்குலாபின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி சென்னை ‘ஸ்பேஸஸ்’ அரங்கில் அ. மங்கையின் இயக்கத்தில் இன்குலாபின் ‘ஔவை’ நாடகம் நேற்று நிகழ்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்றும் பல்வேறு நிகழ்வுகள் நடக்கவிருக்கின்றன. ‘ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்’ என்ற தலைப்பில் இன்குலாப் கவிதைகளின் முழுத் திரட்டு, இன்குலாப் பற்றிய கட்டுரைகள் அடங்கிய நூல் ஆகியவற்றின் வெளியீடு இன்று நடக்கிறது. கவியரங்கம், ஆய்வரங்கம், ஆவணப்படத் திரையிடல் என்று தொடர் நிகழ்வுகளில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, மார்க்ஸிய-பெரியாரிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை உள்ளிட்ட முக்கியமான ஆளுமைகள் பலர் இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றனர். தரமணியில் உள்ள ‘ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக’த்தில் இந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

துல்கர் சல்மான் குரலில் மனுஷ்ய புத்திரன்!

சமீபத்தில் வெளியான ‘சோலோ’ திரைப்படத்தில் மனுஷ்ய புத்திரன் கவிதைகள் நடிகர் துல்கர் சல்மான் குரலில் இடம்பெற்றிருந்தன. தமிழ்க் கவிதைகளைக் குரல் வழியாகக் கேட்பதில் உள்ள பரவசத்தை துல்கர் சல்மானின் குரல் தந்தது. கவிதைகளைத் தந்த மனுஷ்ய புத்திரனுக்கும் குரலைத் தந்த துல்கர் சல்மானுக்கும் வாழ்த்துகள்!

நிகழ்த்துக் கவி!

பொயட்ரி வித் பிரக்ருதி என்ற மாதாந்திர தொடர் நிகழ்வின் ஒரு பகுதியாக, திஷானி தோஷி எழுதிய ஆங்கிலக் கவிதைகள் ‘கேர்ள்ஸ் ஆர் கம்மிங் அவுட் ஆஃப் தி வுட்ஸ்’ என்ற தலைப்பில் சென்னையில் உள்ள அலையன்ஸ் ஃப்ரான்சைஸில் கடந்த வியாழன் அன்று வெளியிடப்பட்டது. வெளியீட்டுக்கு முன் கவிஞரும் நடனக் கலைஞருமான திஷானி தோஷி, தொகுப்பில் இடம்பெற்ற சில கவிதைகளை நடனமாக நிகழ்த்திக்காட்டினார். தொடர்ந்து கர்னாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கும் அவருக்கும் இடையே இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள் குறித்து உரையாடல் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x