Last Updated : 07 Oct, 2017 10:00 AM

 

Published : 07 Oct 2017 10:00 AM
Last Updated : 07 Oct 2017 10:00 AM

திருஇந்தளூரிலிருந்து திருவல்லிக்கேணி வரை... இதுவரை பிரசுரமாகாத நினைவுக்குறிப்புகள்

ன் தந்தைக்கு என்னைச் சேர்த்து பத்துப் பிள்ளைகள். இரண்டாவது நான். என் பள்ளிப் படிப்பு உயர்நிலைப் பள்ளிக்கு வரத் தொடங்கியதும் படிக்க வைக்கத் தந்தையார் மிகவும் கஷ்டப்பட்டார். நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்ததும் அப்பொழுது வடமொழி, சிறப்புத் தமிழ் என்ற வாய்ப்பில் என்னை வடமொழியில் சேர்த்து விட்டார். ஆறாம் வகுப்பில் எனது முதல் தமிழ்க் கவிதையும் அதைத் தொடர்ந்து எனக்குத் தமிழ் நூல்களில் ஏற்பட்ட ஈடுபாடும் என் தந்தைக்கு மகிழ்ச்சி தரவில்லை. அந்த வயதில் நான் வீட்டுச் சுவர்களில் சொந்தமாகச் சித்திரங்கள் வரையத் தொடங்கியதும் திகைத்தார். எட்டாம் வகுப்பு முடிந்ததும் தமிழ்ப் புலவர் வகுப்பில் என்னைச் சேர்க்க வேண்டும் என்று சிலரும் கூறத் தொடங்கியபோது என் தந்தை வருந்தத் தொடங்கினார். பையன் கவியாகவோ சித்திரக்காரனாகவோ வரலாம். ஆனால், அது வாழ்க்கைக்கு வசதியானதில்லையே என்று சொல்லத் தொடங்கினார். குடும்பம் பெரியதாகையால் நான் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து ஏதாவது வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என விரும்பினார். தருமை ஆதீனத்துத் தமிழ்க் கல்லூரியில் சேர வேண்டுமென்று, பள்ளி இறுதியாண்டு தேர்ச்சி பெற்றதும் கூறினேன். அதற்குப் பதில் சொல்லாததால் நான் மூன்று நாட்கள் உபவாஸம் இருந்தேன். மூன்றாம் நாள் இரவு, தனிக்கல்வி வகுப்புகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய தந்தை, வாசல் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு கூப்பிட்டார். என்னிடம் சொன்னார்: ‘நீ ஹைஸ்கூல் படிப்பதற்கே ரெட்டியார் உபகாரச் சம்பளம் தேவைப்பட்டது. நீ வேலைக்குப் போனால் எனக்குக் கஷ்டம் குறையும். உன் தம்பிகளும் உன் வருமானத்தில் படிப்பார்கள்’ என்றார். நான் உபவாஸத்தைக் கைவிட்டு வேலைக்குப் போனேன். என் கல்வி எல்லோருக்கும் பங்கிட்டுத் தரப்பட்ட சில பருக்கைகள்தான்.

கம்பர் என் ஆசிரியர்

மாயூரம் தாலுகாவில் ஒரு முனிசிபல் வார்டாக இருப்பது நான் பிறந்த ஊராகிய திரு இந்தளூர். இது ஒரு வைணவத் தலம். திருமங்கையாழ்வாரால் பார்த்துப் பாடப்பட்டது. மாயூரம் தாலுகாவைச் சேர்ந்த, ஆனால் சற்றுத் தொலைவில் உள்ள தேரிழந்தூர் கம்பர் பிறந்த ஊர். திரு இந்தளூரை மக்கள் திருவழுந்தூர், திருவிழந்தூர் என்று சொல்வார்களாதலால் வெளியார்களுக்கு அது கம்பர் பிறந்த ஊரான தேரிழந்தூராகிய திருவழுந்தூரை ஓசையில் நினைவூட்டும். தேரிழந்தூர் கிராமப் புறமாகையால், அங்கே படித்த வைணவர்கள் எங்கள் ஊருக்குக் குடியிருந்தார்கள். இவர்களில் ஒருவர் எனக்கு ஆறாம் வகுப்பு ஆசிரியராக இருந்த ஸ்ரீநிவாஸ ஐயங்கார். கம்பராமாயணம் தெரியத் தொடங்கியதும் ஸ்ரீநிவாஸ அய்யங்காரிடம் எனக்கு அவர் கம்பர் ஊர்க்காரர் என்பதால் மதிப்பு கூடியது. என் கவிதையை அவரிடம்தான் முதலில் படித்துக்காட்டினேன். அவர் என் கவிதையைக் கேட்டுவிட்டு அதில் யாப்பு இலக்கணம் சரியாக இல்லை என்றார். என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு யாப்பு இலக்கணம் படிக்க வேண்டும் என்றார். அது எங்கே கிடைக்கும் என்று கேட்டதற்கு ‘கிடைக்கும். அது இப்போது உனக்குப் புரியுமா?’ என்று கேட்டார். யாப்பு பிறகு தெரிந்துகொள்ளலாம், முதலில் நிறையப் படி என்றார். நல்ல வேளையாக என் அண்ணன் 9-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததால் அவனது இலக்கணப் புத்தகத்தை எடுத்து யாப்பிலக்கணம் கற்றுக்கொண்டேன். யாப்பின் அடிப்படைகள் அன்றைக்கே தெரிந்துகொண்டதில் என் அண்ணன் பாடப் புத்தகத்தில் வந்திருந்த ராமாயணம், சிலப்பதிகாரம் இரண்டையும் ஆராய்ந்தேன். கம்பனின் குகப் படலம் அது. அது எழுதப்பட்டிருந்த நேர்த்தி என்னைக் கவர்ந்தது. அடுத்து 5 வருடங்களுக்குக் கம்பர் என் தீவிரமான வாசிப்புக்காளானார். உருவாகும் இளம் வயதில் என் ஆசிரியனாகக் கம்பர் இருந்தார்.

உலக இலக்கியம்

உள்ளூரில் இருந்தபொழுது எல்லாத் தமிழ் நூல்களும் கிடைத்தன. ஒரு நாள் பஸ்ஸில் யாரோ விட்டுவிட்டுப் போய்விட்டதாகச் சொல்லி என்னிடம் வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதை நூலொன்றை என் மாமன் எனக்குக் கொண்டுவந்தார். கோல்ட்ஸ்மித்தின் கவிதை ஒன்றும் நான் படித்திருந்தேன். இன்னும் ஆங்கிலத்தில் ஏராளமான கவிஞர்கள் இருப்பார்கள், ஏராளமாகக் கவிதைகள் இருக்கும் என்பது தெரிந்திருந்தது. அவற்றின் கற்பனை முறை என்னைக் கவர்ந்தது. நிறைய ஆங்கில நூல்கள் படிக்க வேண்டும் என்று தோன்றியது. பள்ளி இறுதி வகுப்பு முடிந்து, அதற்குப் பிறகு நான்கைந்து ஆண்டுகள் நான் தமிழைத் தவிர வேறொன்றும் வேண்டாதவனாக இருந்தேன். ஆங்கிலம் அந்நிய ஆதிக்க மொழி என்பதும் அதனால் இந்திய மொழிகள் பாதிக்கப்படுகின்றன என்பதும் என்னிடத்தில் எதிர்ப்புணர்வை வளர்த்திருந்தன. ஆனால் ஆங்கில இலக்கியம் படிக்க ஆவலும் எழுந்தது. வேர்ட்ஸ்வொர்த் போன்ற கவிஞர்கள் எழுதிய மொழி என்ற எண்ணமும் தலையெடுத்தது. உள்ளூரில் ஆங்கில நூல்கள் கிடைக்க வழியில்லை. சென்னைக்கு வந்ததும் நூலக வசதி கிடைத்தது. 1959-ம் ஆண்டு ஜூன் முதல் தேதியிலிருந்து ஆங்கில நாளிதழ்களைப் படிப்பது பாவமில்லை என்று தொடங்கினேன். அன்று மாலையிலிருந்தே நூலகம் செல்லத் தொடங்கினேன். ஜப்பானியக் கவிதைகள் முதலில், பின்பு சீனக் கவிதைகள், பிறகு ஆங்கிலேய அமெரிக்கன் கவிதைகள் என்று படிக்கத் தொடங்கினேன். இதனால் என் கவிதைகள் ஆழமாகப் பாதிக்கப்பட்டன என்று கூற முடியாது என்றாலும் ஏதோ ஒரு திருப்பத்தில், ஒரு நடையில், ஒரு கண் சிமிட்டலில் அதன் சாயல் இருப்பதைக் கூற முடிகிறது. அதைவிட முக்கியமாகத் தமிழ்க் கவிதைகளை மற்றவற்றோடு எடை போட முடிந்தது.

இலக்கிய வாழ்க்கை

1960-ம் ஆண்டு என் கைவசமிருந்த கவிதைகள் எதையும் எந்த ஏட்டிலும் வெளியிட முடியவில்லை. தமிழ்நாட்டின் எல்லைப் பிரச்னை, தமிழ்நாடு பெயர் வைப்புப் போராட்டம் ஆகியவற்றில் கலந்துகொண்டதோடு மூன்று கவிதைகளும் வெளியாகின. எந்த ஏடும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. கவிதைகளை வெளியிடத் தனி ஏடு வேண்டும் என்று தோன்றியதோடு, பெரிய ஏடுகளை எதிர்த்துப் பிரசுரிக்க ஏடுகள் வேண்டும் என்றும் கறுவத் தொடங்கினேன். இந்தச் சமயத்தில் வெளிவந்துகொண்டிருந்த சி.சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ என்ற ஏடும் என் கவிதையை வெளியிட மறுத்துவிட்டது. ஒருபுறம் மரபுக் கவிதையாளர்கள் என் கவிதைகளைப் புதுக்கவிதைகள் என்று தள்ள, மறுபுறம் அவற்றை மரபுக் கவிதைகள் என்று சி.சு. செல்லப்பா உள்ளிட்ட சிலர் தள்ள, என் கவிதைகள் என்னிடம் தங்கின. 1968-ம் ஆண்டு கிழித்தெறிந்தவை போக சிலவற்றை முதல் தடவையாக சி. மணியின் ‘நடை’யில் வெளியிட முடிந்தது.

- 1981-ல் ஒரு ஆய்வு மாணவருடன்

ஞானக்கூத்தன் மேற்கொண்ட

உரையாடலிலிருந்து சில பகுதிகள்.

அக்டோபர்-7, ஞானக்கூத்தன் பிறந்த நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x