Published : 14 Mar 2023 09:40 AM
Last Updated : 14 Mar 2023 09:40 AM

ஜம்முவில் தொடங்கி 30,121 கி.மீ. தூரம் நீண்ட சைக்கிள் பயணம்: ராஜஸ்தான் இளைஞர் கின்னஸ் சாதனை

நர்பத் சிங் ராஜ்புரோகித் | கோப்புப்படம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானை சேர்ந்த 34 வயதான நர்பத் சிங் ராஜ்புரோகித், 30,121 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் ஓட்டி, ஒரு நாட்டில் மிக நீண்ட சைக்கிள் பயணம் செய்தவர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தை சேர்ந்தவர் நர்பத் சிங் ராஜ்புரோகித் (34). இவர் தனது சைக்கிள் பயணத்தை ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019 ஜனவரியில் தொடங்கினார். நாடு முழுவதும் சைக்கிளில் 30,121. கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்த இவர், 29 மாநிலங்களில் பயணம் செய்து கடைசியில் தனது சொந்த மாநிலத்தின் ஜெய்ப்பூரில் 2022 ஏப்ரலில் பயணத்தை நிறைவு செய்தார்.

இந்நிலையில், ஒரு நாட்டில் மிக நீண்ட சைக்கிள் பயணம் செய்தவர் என்ற சாதனை படைத்த அவருக்கு கின்னஸ் நிறுவனம் சார்பில் உலக சாதனைக்கான சான்றிதழ் கடந்த வியாழக்கிழமை வழங்கி கவுரவம் வழங்கப்பட்டது.

சைக்கிள் பயணம் அவ்வளவு எளிதாக ஒன்றும் அமையவில்லை. கரோனா தொற்று பரவிய ஊரடங்கு காலத்தில் ராஜ் புரோகித் தமிழகத்தில் இருந்துள்ளார். அப்போது தனது பயணத்தை சுமார் 4 மாதங்கள் நிறுத்தினார். ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டிருந்த போது அவர் பெரும்பாலும் பிஸ்கட் மட்டுமே உட்கொண்டுள்ளார். தனது பயணத்தில் 93 ஆயிரம் மரக்கன்றுகளை இவர் நட்டுள்ளார்.

ஜிபிஎஸ் கருவி உதவியுடன் பயணம் மேற்கொண்ட இவர் விபத்திலும் சிக்கியுள்ளார். இதில் அவருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. எனினும் மனம் தளராமல் பயணத்தை
தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து ராஜ்புரோகித் கூறும்போது, “சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற எனது பிரச்சாரத்தை அதிகபட்ச மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒரே இலக்கு மட்டுமே எனக்கு இருந்தது. பள்ளிகள், கல்லூரிகள், ரயில் நிலையங்களுக்கு சென்று மரக்கன்றுகளை விநியோகித்தேன்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து மக்களிடம் தெரிவிக்க, எனது பயணத்தில் சுமார் 1400-1500 இடங்களில் கூட்டங்களை நடத்தினேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x