Published : 10 Mar 2023 05:21 PM
Last Updated : 10 Mar 2023 05:21 PM

அரசு மருத்துவமனைகளில் 40 ஆண்டுகளாக பணி - சென்னை கல்லூரியில் 40 செவிலியர்கள் ரீயூனியன் நெகிழ்ச்சி!

ஒன்று கூடி நினைவுகளை பகிர்ந்துகொண்ட 40 செவிலியர்கள் | படங்கள் : ம.பிரபு

சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சிப் பள்ளியில் படித்து அரசு மருத்துவமனைகளில் 40 ஆண்டுகளாக பணியாற்றும் 40 செவிலியர்கள் ஒன்று கூடி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

சென்னை மருத்துவக் கல்லூரியின் (எம்எம்சி) கீழ் செயல்படும் செவிலியர் பயிற்சிப் பள்ளியில் 1983-ம் ஆண்டு டிப்ளமோ நர்சிங் படித்த 40 பேர் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செவிலியர் கண்காணிப்பாளராகவும், அரசு செவிலியர் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி வருகின்றனர். செவிலியர் துறையில் 40 ஆண்டுகளாக பணியாற்றி இந்த 40 செவிலியர்கள் இன்று (பிப்.10) சென்னை மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சிப் பள்ளியில் ஒன்று கூடி ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர். மேலும், தங்களுக்கு வகுப்புகள் எடுத்த ஆசிரியர்களை கவுரப்படுத்தினர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "சென்னை அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் 1983-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி 1986-ம் ஆண்டு வரை டிப்ளமோ நர்சிங் படிப்பை 100 பேர் படித்தோம். அதில், தற்போது 40 பேர் வாட்ஸ் அப் குரூப்பில் தொடர்பில் இருக்கிறோம். சிலர் இறந்துவிட்டனர். மற்றவர்களை கண்டறிய முடியவில்லை. நாங்கள் 40 பேரும் வாட்ஸ்அப் குரூப்பில் ஒருவொருக்கொருவர் நலம் விசாரிப்பதோடு, பிள்ளைகளின் திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் சந்தித்து வருகின்றோம்.

இந்த 10-ம் தேதியுடன் நாங்கள் செவிலியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து 40 ஆண்டுகள் ஆகிறது. இந்த 40-வது ஆண்டை கொண்டாடும் விதமாக செவிலியர் பயிற்சிப் பள்ளியில் 40 பேரும் ஒன்று கூடி நினைவுகளை பகிர்ந்து கொண்டோம். இதற்கு முன்பாக 25 ஆண்டை கொண்டாடினோம். அப்போது, இந்த கொண்டாட்டத்தில் 75 பேர் கலந்து கொண்டனர். தற்போது 40-வது ஆண்டுக் கொண்டாட்டத்தில் 40 பேர் கலந்துக் கொண்டுள்ளோம்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x