Published : 07 Mar 2023 04:15 PM
Last Updated : 07 Mar 2023 04:15 PM

விவசாயிகளும் தொழில்முனைவோரும் சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்தல்

மதுரை: "நம்மிடையே பரவியுள்ள பல்வேறு வகை உணவுப் பழக்க வழக்கங்களால் நாம் நம்முடைய பாரம்பரிய உணவு பழக்கத்திலிருந்து வெகுதூரம் சென்று விட்டோம்" என்று சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.

உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து சிறுதானிய விழா மற்றும் கண்காட்சியை மதுரை வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடத்தின. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் கண்காட்சியை ஆகியோர் திறந்து வைத்து சிறுதானியத்தின் நூல்களை வெளியிட்டார்கள்.

இந்நிகழ்வில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: “இன்றைய வேகமான உலகில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு குறித்து நாம் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. இன்று நம்மிடையே பரவியுள்ள பல்வேறு வகை உணவுப் பழக்க வழக்கங்களால் நாம் நம்முடைய பாரம்பரிய உணவு பழக்கத்திலிருந்து வெகு தூரம் சென்று விட்டோம். தமிழர்களின் பாரம்பரிய உணவு முறையில் முதலிடத்தில் இருந்தது. தினை, கேழவரகு, கம்பு, சோளம், சாமை, குதிரைவாலி போன்ற உடலுக்கு வலிமை சேர்க்கும் சிறுதானியங்கள். அதன் பிறகே, அரிசி, கோதுமை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த வகை சிறுதானியங்கள் ஊடுபயிராகவே விளைவிக்கப்பட்டு வந்தது.

சிறுதானியங்கள் பயன்படுத்துவது மக்களிடையே குறைந்ததால், விவசாயிகளும் அதனை பயிரிடுவதை குறைத்து கொண்டனர். ஆனால், இன்றைய இளைய சமுதாயத்தினர் இடையே, ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இயற்கை உணவு முறைக்கு மாற ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நம் விவசாயிகளும், தொழில்முனைவோர்களும், சிறுதானியங்களை விளைவிக்கவும், அவற்றை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

சிறுதானியங்களை விளைவிக்க வேளாண் துறை மூலம் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அவ்வாறு விளைவிக்கப்படும் சிறு தானியங்களை மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்களாக மாற்றவும், உணவாக பதப்படுத்தவும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் பல்வேறு மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய உணவு முறையில் மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருள்கள், உணவு பதப்படுத்துதல் ஆரம்ப காலம் முதலே உள்ளது.

வேளாண்மை துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அதற்கென தனி பட்ஜெட் அறிவிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்திடவும், அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்திடவும், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பொது மக்கள் தங்களுடைய அன்றாட உணவில் சிறு தானியங்களை அதிகளவில் சேர்த்து கொண்டால், அது, தங்களுடைய ஆரோக்கியத்திற்கும், உடல் வலிமைக்கும் பயன் உள்ளதாக அமைவதுடன், அது சார்ந்துள்ள, விவசாயிகள், மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருள் தயாரிப்பாளர்கள், உணவு பதப்படுத்தும் தொழில்முனைவோர், வியாபாரிகள் என சமுதாயத்தின் அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும்” என்று அவர் பேசினார்.

இந்நிகழ்வில் சோழ வந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் வி.அருண், ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x