Last Updated : 21 Feb, 2023 06:55 PM

 

Published : 21 Feb 2023 06:55 PM
Last Updated : 21 Feb 2023 06:55 PM

பர்கூர் அரசு மருத்துவனையில் தினமும் காலை உணவு வழங்கும் தன்னார்வலர்கள்: 500 நாட்களில் 27,600 நோயாளிகள் பயன்

பர்கூர் அரசு மருத்துமனை நோயாளிகளுக்கு தினமும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து உணவு வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். 

கிருஷ்ணகிரி: பர்கூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தினமும் காலை உணவினை, தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து வழங்கி வருகின்றனர். 500-வது நாளான இன்றுடன் (21ம் தேதி), 27,600 பேருக்கு வழங்கி உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில், அறம் செய்ய விரும்புவோர் சங்கம் உள்ளது. இதில், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகள், டி.எஸ்.பி., வக்கீல்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஜவுளிக் கடை உரிமையாளர்கள் என 33 வயது முதல் 88 வயது வரை 70 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் கடந்த 2021 அக்.10-ம் தேதி முதல், பர்கூர் அரசு மருத்துவமனை நோயாளிகள் 50 பேருக்கும், சிறப்பு நாட்களில் 100 பேருக்கும் தினமும் காலை உணவை வழங்கி வருகின்றனர். தினமும் 4 இட்லி, ஒரு வடை, முட்டை, வாழைப்பழம், கடலை பர்பி என சரிவிகித உணவாக வழங்கி வரும் இவர்கள் நேற்றுடன் 500 நாளை முடித்து இதுவரை 27 ஆயிரத்து 600 பேருக்கு உணவு வழங்கி உள்ளனர்.

இது தொடர்பாக அமைப்பின் தலைவரும், ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் முனுசாமி கூறியது: ''கரோனா கால கட்டத்தில் வெகு தொலைவில் இருந்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உணவு இன்றி மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து தூய்மை பர்கூர் அமைப்பை உருவாக்கி, தினமும் 50 பேருக்கு காலை உணவாக இதுவரை 27,600 பேருக்கு வழங்கி உள்ளோம். 500 நாளை கடந்தும் இப்பணியை கைவிடாமல் செய்து வருகிறோம். இதைப் பார்க்கும் தன்னார்வலர்கள் பலர் எங்களுக்கு உதவ முன்வந்ததால், இந்த அமைப்பின் பெயரை அறம் செய்ய விரும்புவோர் சங்கம் என மாற்றி வங்கிக் கணக்கு ஒன்றையும் தொடங்கி அதில் பணத்தை சேமித்து உணவை வழங்கி வருகிறோம்.

உணவின் தரம் பரிசோதனை: மேலும், பொதுமக்கள் தங்கள் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் நினைவு நாளில் அவர்களாகவே முன்வந்து உணவைக் கொடுக்கின்றனர். உணவையும் பெரிய ஓட்டல்களில் தயாரித்து தருவதாக சொன்னார்கள். ஆனால், ஏழ்மையான ஒரு குடும்பத்திற்கு உதவும் என்பதால் ஒரு சிறிய ஓட்டல் நடத்துபவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியை வழங்கி உள்ளோம். உணவின் தரத்தை பரிசோதித்த பின்னர்தான் நோயாளிகளுக்கு வழங்குகிறோம். இதுகுறித்து கருத்து கேட்பு கையேடும் பராமரிக்கிறோம். அதுமட்டுமின்றி மருத்துவ மனையை சுத்தம் செய்தல், விழிப்புணர்வு பேரணி நடத்துதல், பணம் பெறாமல் வாக்களிக்க வேண்டும் என பிரசாரம் செய்தல், டாக்டர்களைக் கொண்டு சுத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.

கையேந்தாத நிலையை உருவாக்க மேலும் பர்கூரைச் சுற்றியுள்ள இருளர் இன மக்களுக்கு சாதிச்சான்று பெற்றுத் தருதல், கரோனா காலங்களில் அவர்களின் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளோம். வரும் காலங்களில் உணவுக்காக கையேந்தாத ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியமாக உள்ளது” என்று அவர் கூறினார். இந்நிகழ்வில் துணைத் தலைவர் டாக்டர் வெங்கடேசன், பொருளாளர் பாப்பிசெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x