Last Updated : 16 Aug, 2022 10:23 PM

 

Published : 16 Aug 2022 10:23 PM
Last Updated : 16 Aug 2022 10:23 PM

வாகன ஓட்டிகளை கவரும் ‘தேங்காய் பூ’: மதுரையிலும் களைகட்டும் விற்பனை

மதுரை வாகன ஓட்டிகளை கவர்ந்து வரும் தேங்காய் பூ விற்பனை

மதுரை: மதுரையில் சாலையோரங்களில் விற்கப்பட்டு வரும் ‘தேங்காய் பூ’ வாகன ஓட்டிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது.

பச்சைக் குடுமி வளர்ந்த தேங்காயாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தென்னை நாற்றுக்கள், அதன் மேல் சிரட்டையில் வழித்து எடுத்து வைத்திருக்கும் வெண்ணெய் போல வெளியே நீட்டியிருக்கும் ‘தேங்காய் பூ’ தற்போது மதுரை வாகன ஓட்டிகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

பூமிக்கு கீழ் விளையும் உணவு வகையில் தேங்காய் பூவும் ஒன்று. நன்கு விளைந்த தேங்காய்களை சேகரித்து, தென்னை நாற்றுகளை உருவாக்குவது போல மணற்பாங்கான இடத்தில் பூமிக்கடியில் புதைத்து, குறிப்பிட்ட நாளுக்கு பிறகு தோண்டி எடுத்து தேய்காய் மேலுள்ள ஓட்டை பிரித்தெடுத்து, அதில் விளைந்திருக்கும்பூ போன்ற பருப்பை மட்டும் உணவாக சாப்பிடுவது வழக்கம். பெரும்பாலும், ஆந்திர மாநில கோதாவரி போன்ற இடங்களில் இந்த தேங்காய் பூ அதிகமாக விளைகிறது என, விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது, தேங்காய் பூக்கள் சீசனாக கருதும் நிலையில், சென்னை, திருத்தணி பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் சில மதுரையில் கருப்பாயூரணி, ரிங் ரோடு, மாட்டுத்தாவணி பகுதிகளில் சாலையோரத்தில் தேங்காய் பூக்களை விற்பனை செய்து வருகின்றனர். தென்னங்கன்று முளைவிட்ட நிலையில், தேய்காயில் இருந்து பூக்களை பிரித்தெடுத்து விற்கின்றனர். பார்க்க வித்தியாசமாக இருப்பதால் வாகனங்களில் செல்வோரை இதனால் வெகுவாக ஈர்க்கப்படுகின்றனர். மஞ்சள் காமாலை, வயிறு தொடர்பான கோளாறுகளை நீக்கும் மருந்தாக தேங்காய் பூ இருக்கிறது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வியாபாரி ஜெயகுமார் கூறும் போது, "தமிழக பகுதியில் தேங்காய் பூ அதிகமாக விளையாது. வைசாக், கோதாவரி ஆற்றப்படுகை பகுதியில் விவசாயமாகவே சாகுபடி செய்கின்றனர். எண்ணெய், நார்சத்து மிகுந்த தேய்காய் பூவை சாப்பிட்டால் தைராய்டு, வயிற்று புண், மஞ்சள் காமாலை, மாதவிடாய் கோளாறு உள்ளிட்ட 26 வகை நோய்கள் குணமாகிறது. காலையில் வெறும் வயிற்றில் 7 நாள் இதனைச் சாப்பிட வேண்டும். மதுரை, திருச்சி போன்ற பகுதியில் தேங்காய் பூ விற்பனை பெரிதாக இல்லை. இதனால் கோதாவரி பகுதியில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து விற்கிறோம். அரிதாக பார்க்கப்படுவதால் பலர் விரும்பி வாங்கிச் சாப்பிடுகின்றனர். வீட்டுக்கும் வாங்கிச் செல்கின்றனர்" என்றார்.

இதுகுறித்து உணவு நிபுணர் வசந்தா கூறுகையில், ‘‘பொதுவாக இளநீர் உடலுக்கு ஆரோக்கியமானது. தேங்காய் பால் வயிற்று புண்ணை குணப்படுத்தும். செவ்விளநீரைத் தொடர்ந்து 48 நாள் குடித்தால் அல்சர் நீங்கும். இதன்படி, தேங்காய்களில் இருந்து கிடைக்கும் தேங்காய் பூ போன்ற பொருட்கள் மனித உடலுக்கு நன்மை தரும். சிறுநீரக தொற்றை குணப்படுத்தும், நச்சுகளை வெளியேற்ற உதவும். இருப்பினும், தேங்காய் பூ சாப்பிட்டால் எதிர்வினை இருக்காது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x