Last Updated : 20 May, 2022 02:28 PM

 

Published : 20 May 2022 02:28 PM
Last Updated : 20 May 2022 02:28 PM

இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மே 22-ல் மீண்டும் மொய் விருந்து: புதுக்கோட்டை டீ கடைக்காரர் ஏற்பாடு

புதுக்கோட்டை: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் தமிழர்களுக்கு உதவி செய்வதற்காக புதுக்கோட்டையில் டீ கடைக்காரர் மீண்டும் ஒரு மொய் விருந்தை மே 22-ம் தேதி நடத்துகிறார்.

திருவரங்குளம் அருகே மாங்கனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.சிவக்குமார் (45). மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இவர், வம்பன் 4 சாலை பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக டீக்கடை வைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக புதுக்கோட்டை கேப்பறை பகுதியிலும் ஒரு கடையை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2018-ல் கஜா புயலால் இந்த பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டபோது தனது கடையில் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் வைத்திருந்த பாக்கி சுமார் ரூ.28 ஆயிரத்தை தள்ளுபடி செய்தார். அப்போது, பொதுமக்களுக்கு அரசே எந்தக் கடனையும் தள்ளுபடி அறிவிப்பை வெளியிடாத சமயத்தில் இவரது செயல்பாடானது தமிழகம் முழுவதும் பேசப்பட்டது.

அதன்பிறகு, கரோனா பரவலின் தொடக்கத்தில் மக்களுக்கு உதவி செய்வதற்காக வம்பன் 4 சாலையில் உள்ள டீக்கடையில் மொய் விருந்து நடத்தினார். அன்றைய தினம் அங்கு வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் பணத்தை இட்டு சென்றவர்களுக்கு டீ, வடை இலசமாக வழங்கப்பட்டது. அதன் மூலம் கிடைத்த ரூ.14,452 மற்றும் அவரது வங்கிக் கணக்குக்கு வந்த ரூ.5 ஆயிரத்தையும் சேர்த்து ஆட்சியர் வழியாக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு உதவி செய்வதற்காக கேப்பறையில் உள்ள டீ கடையில் மே 22-ம் தேதி மீண்டும் ஒரு மொய் விருந்தை நடத்துவதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அன்றைய தினம் மொய் செய்வோருக்கு வழக்கம்போல் டீ, வடை போண்டா வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து 'இந்து தமிழ்' நாளிதழிடம் சிவக்குமார் கூறியபோது, ''வாடிக்கையாளர்கள் வைத்திருந்த பாக்கியை தள்ளுபடி செய்ததும், மொய் விருந்து நடத்தி கரோனா நிவாரண நிதி அளித்ததும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதோடு, கரோனா பரவலின்போது கபசுர குடிநீர், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. நாடக கலைஞர்கள் போன்றவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

பெரியார் பிறந்தநாளில் வாடிக்கையாளர்கள் 300 பேருக்கு 'பெண் ஏன் அடிமையானாள்' எனும் புத்தகத்தை வழங்கினேன். இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்வதற்காக கேப்பறை டீ கடையில் மே 22-ம் தேதி காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மொய் விருந்து நடத்த உள்ளேன். அதில் கிடைக்கும் தொகையை ஆட்சியர் வழியாக அரசுக்கு அனுப்பி வைப்பேன்” என்றார். ஒரு டீ கடைகாரரின் முயற்சியை அவ்வழியே செல்வோர் பாராட்டி செல்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x