Published : 02 Mar 2022 05:25 PM
Last Updated : 02 Mar 2022 05:25 PM

காப்போம் குழந்தைகளைக் கருவிலே - சித்த மருத்துவ வழிகாட்டுதல்

தாயானவள் கருவிலே உண்டான உயிரைச் சிறிதும் வேறாகக் கருதாது, உடல் வருந்தத் தொழில் செய்யாமலும், அதனைப் போக்கிட நினையாமலும், ஏன் வந்தது என்று மனம் வருந்தாமலும் பேணிக் காத்தல் வேண்டும். கருவுற்று இருக்கும் சமயங்களில் போதிய சத்தான உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, வேளை சுமைகளில் சோர்வு உற்று இருப்பது, தாய் - தந்தை சண்டையிட்டுக் கொள்ளுவது, நவீன தொழில் நுட்பங்களினால் கருவிற்கு உண்டாகும் ஆபத்து தெரியாமல் அலட்சியமாக நடந்து கொள்வது போன்ற காரணங்கள் தாய்க்கு மகப்பேற்றை இயற்கை முறையில் அமையாமல் சிக்கலுக்கு உரிய ஒன்றாக மாற்றிவிடும். முக்கியமாக, பிறக்கும் குழந்தையும் பல குறைபாடுகளுடன் காணப்படும்.

மன, உடல் நலக் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பதற்கு, தம்முடைய உணவு முறை, தம்முடைய வாழ்வியல் முறையும் காரணம் என்ற உண்மையை பலரும் அறிவதும் இல்லை; உணர்வதும் இல்லை. நமது உணவு முறைகளில், நமது வைத்திய முறைகளில் என்ன உள்ளது எனத் தெரிந்து வைத்துக் கொள்வதும் முக்கியமே.

இரைக்குடலுக்கான சூரணங்கள்: இரைக்குடலில் உண்டாகும் கோளாறுகளே அனைத்து நோய்களுக்கும் முதன்மையாக நிற்கின்றன. தம்பதியர் குழந்தை பெறுவதற்கான சிகிச்சை மேற்கொள்ளும்போது முதலில் இரைக்குடலின் செயல்பாட்டைச் சீர்படுத்தத் திரிகடுகு , பஞ்ச தீபாக்கினி போன்ற சூரணங்களை 5 நாள் சாப்பிட வேண்டும். இந்தச் சூரணங்களில், நாம் அன்றாட பயன்படுத்தும் பொருள்களே உள்ளன. திரிகடுகில் - சுக்கு, திப்பிலி, மிளகு போன்றவையும், பஞ்ச தீபாக்கினியில் - சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் போன்றவையும் உள்ளன. இவற்றைக் குறிப்பிட்ட அளவில் முறைப்படி எடுத்துக் கொள்ளும் போது வயிற்றில் உள்ள ஆமம் நீங்கி வாத, பித்த, கபம் என உடலை இயக்கும் முத்தாதுக்களும் சமனிலைப்படும்.

எண்ணெய் காப்பிட்டுக் குளித்தல்: அதன் பின்பு நம் முன்னோர்கள் கூறியுள்ளபடி, ஆண், பெண், குழந்தைகள் என அனைவரும் எண்ணெய் காப்பிட்டுக் குளித்தல், அவர்களுக்குக் கூடுதல் நன்மை அளிக்கும். எட்டுத் தினங்களுக்கு இருமுறை தேய்த்துக் குளித்தால், நோய்களை நம்மை அண்டாமல் விலகிச் செல்லும். நல்ல தைலத்தை உடலில் தேய்த்துக் கொள்வதால் இரத்த ஓட்டம் அதிகமாகிறது. தைலத்தைத் தேய்த்துக் கொண்டு சிறிது நேரம் ஊறுவதால் அதன் சத்துக்களும் உடலின் உள் செல்கின்றன.

காயத்ரி விவேகானந்தன், சித்த மருத்துவர்

திரிதோஷ கல்பம்: எண்ணெய் குளியல் செய்த பின்பு திரிதோஷ கல்பம் எனப்படும் மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன்படி காலையில் இஞ்சி சாறும், மதிய உணவுகளில் சுக்குப் பொடியும், மாலையில் கடுக்காய் தூளை நல்ல தண்ணீரில் 48 நாள் எனப்படும் ஒரு மண்டலம் சாப்பிடத் தேகத்தில் உணவினால் சாரம், இரத்தம், ஊன், கொழுப்பு, என்பு, மஞ்ஞை, சுக்கிலம் என ஏழு தாதுக்களும் சீர் பெறும். ஏழாவது தாது ஆகிய சுக்கிலத்தைக் கட்டும். விந்து உரம் பெறும். மேற்சொல்லப்பட்ட உணவு முறைகள், பழக்க வழக்கங்களைத் தாய் தந்தையர் ஆகப் போகும் இருவருமே கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு கடைப்பிடிக்கும் போது எந்த நோயினாலும் உடல் பாதிக்கப்படாமல் இருக்கும். இந்நிலையில் தாய் கருக்கொள்ளும் போது குழந்தை குறைபாடு இன்றி சுகமகப்பேறு எய்தும்.

பஞ்சாங்குலத் தைலம்

மேலும் குழந்தை கர்ப்பச் சூடும், நோயுமின்றி திடமாகவும், அழகாகவும், புத்திக் கூர்மையுடையதாக இருக்கப் பாவன பஞ்சாங்குலத் தைலம் கர்ப்பம் தரித்துள்ள பத்து மாதங்களும் எடுத்துக் கொள்ள வேண்டும். பாவன பஞ்சாங்குல தைலம் என்பது சிற்றாமணக்கு எண்ணெய்யுடன் இளநீர் சேர்த்துச் செய்யப் பெறுவது ஆகும். இது அரசு கர்ப்பிணிகளுக்காக வழங்கும் சஞ்சீவி பெட்டகத்திலே உள்ளது. வருடக் கணக்கில் காத்திருந்து ஆங்கில வைத்தியம் மேற்கொள்ளுதல், பரிகாரம் எனக் கூறி தங்களையே காயப்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றை யோசிக்காமல் செய்யத் துணியும்போது, 3 மாதங்கள் இம்முறையை கடைப்பிடித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படச் செய்யலாம்.

- காயத்ரி விவேகானந்தன், சித்த மருத்துவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x