Published : 04 Mar 2024 09:59 AM
Last Updated : 04 Mar 2024 09:59 AM

வெயில் கால நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள்

கோவை: கோடை வெயில் காலங்களில் பரவும் அம்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து, கோவை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அருணா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது உடலின் வெப்ப நிலையும் மாறுகிறது. சாதாரண நிலையிலிருந்து வெப்ப நிலை உயரும் போது காய்ச்சல் தொற்றாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால் தட்டம்மை, சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி ஆகிய நோய்கள் வர வாய்ப்பு உள்ளன. வியர்வை, சோர்வு, நடுக்கம் தலைவலி, தசைப்பிடிப்பு, பசியின்மை, நீர் சத்து குறைபாடு போன்ற உபாதைகள் ஏற்படலாம். அம்மை நோய் ஒரு வகை வைரஸினால் பரவும் நோயாகும். இது எளிதில் பரவும்.

இந்நோய் பொதுவாக சிறுவர்களை எளிதில் தாக்கும். பொன்னுக்கு வீங்கி: காது மடலுக்கு கீழ் உள்ள உமிழ்நீர் சுரப்பியை வைரஸ் தொற்று தாக்குவதால், தாடையின் இருபுறமும் வீக்கம் தோன்றுகிறது. மேலும் காய்ச்சல், கழுத்து வலி, தலை வலி, பசியின்மை, பலவீனம், சாப்பிடும் போதோஅல்லது விழுங்கும் போதோ வலி ஏற்படுதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

சின்னம்மை: உடலில் நீர் கட்டியைப் போன்ற சிறிய கொப்பளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரிதாகி நீர்கோர்த்துக் காணப்படும். கொப்பளங்களில் இருந்து நீர் வடியும். பின்னர் நீர்வறண்டு கொப்பளங்கள் உதிரும். இந்த நோய் குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், முதியவர்களுக்கும் எளிதில் பரவும்.

தட்டம்மை: காய்ச்சல், இருமல், மூக்கில் நீர்ஒழுகுதல், கண்ணில் நீர் வடிதல் அதன் அறிகுறிகளாகும். முகம் மற்றும் காதின் பின் பகுதிகளில் வேர்க்குரு போன்ற அறிகுறிகள் தோன்றும். கண்கள் சிவந்து வீக்கமாக காணப்படும். இரண்டு வாரங்களில் இந்த அம்மையும் தானாகவே சரியாகிவிடும்.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவரின் உமிழ் நீர், தும்மல் அல்லது இருமல் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை பகிர்ந்து கொள்வதின் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது. அம்மை ஒரு வைரஸ் தொற்று என்பதால், இரண்டு வாரங்களில் இந்நோய் தானாகவே சரியாகி விடும். எனினும் மருத்துவரின் ஆலோசனைபடி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி நீர் அருந்த வேண்டும்.

இளநீர், பழங்கள், பழச்சாறுகள் போன்றவைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். கூல் டிரிங்க்ஸ், ஜஸ் கிரீம் போன்ற குளிர்ச்சியான பானங்களை தவிர்க்க வேண்டும். பருத்தியிலான தளர்வான உடைகளையே அணிய வேண்டும்.

வெயிலில் சுற்றுவதை தவிர்த்து தற்காத்துக் கொள்ள வேண்டும். மேலும் பாலியஸ்டர், நைலான் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x