Published : 10 Jan 2024 06:01 PM
Last Updated : 10 Jan 2024 06:01 PM

மகளின் நினைவாக ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கிய வங்கி ஊழியர் @ மதுரை

படம் உண்டு. மதுரை கனரா வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம், ரூ.4 கோடி மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியதற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கா.கார்த்திகா பாராட்டினார். அடுத்த படம்: இறந்த மகள் ஜனனி

மதுரை: இறந்த மகளின் நினைவாக பிறந்த ஊரான கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார் மதுரை வங்கி ஊழியர்.

மதுரை மேலூர் அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். இவரது கணவர் உக்கிரபாண்டியன். இவர்களது மகள் ஜனனி. தனது மகள் ஜனனி 2 ஆண்டுக்கு முன்பு இறந்தபோது அளித்த வாக்கின்படி தற்போது தாம் பிறந்த ஊரான கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக ரூ.4 கோடி மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கியுள்ளார் வங்கி ஊழியரான பூரணம்.

கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் தற்போது 142 மாணவர்களும், 9 ஆசிரியர்களும் உள்ளனர். இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதை கேள்விப்பட்ட வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம், தனக்கு சொந்தமான தற்போது ரூ.4 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் 52 சென்ட் பரப்பளவு இடத்தை தனது மகள் ‘ஜனனி’ நினைவாக அரசுக்கு ஜன.5ல் தானமாக பத்திர பதிவு செய்து கொடுத்தார். அதனையொட்டி அதற்கான பத்திரத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.கார்த்திகாவிடம் வழங்கினார். மாவட்டக் கல்வி அலுவலர் சுப்பாராஜ், வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்தர் இந்துராணி, தலைமையாசிரியர் சம்பூர்ணம் முன்னிலையில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம் கூறியது: “நான் பிறந்தது கொடிக்குளம். அப்பா எனக்கு வழங்கியது ஒன்றரை ஏக்கர் நிலம். எனது கணவர் உக்கிரபாண்டியன் கனரா வங்கி ஊழியர். எனது மகள் ஜனனிக்கு ஒன்றரை வயது இருக்கும்போது எனது கணவர் 31 ஆண்டுக்கு முன்பு விபத்தில் இறந்தார். எனது மகளை பி.காம் வரை படிக்க வைத்து 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தேன். குடும்பப் பிரச்சினையால் எனது மகள் இறந்தபோது நல்ல காரியங்கள், தான தர்மங்கள் செய்யுமாறு கூறினார். எனது கணவர் இறந்தபோது எனது மகளுக்காகவே வாழ்ந்தேன்.

எனது மகள் இறந்தபோது யாருக்காக வாழ்வது என நினைத்தேன். அவர் சொன்னதுபோல் தான, தர்மங்கள் செய்யவே வாழ்ந்து வருகிறேன். கடந்த 1998-ல் எனது சகோதரருக்காக ஒரு கிட்னியும் வழங்கி ஒரு கிட்னியுடன் வாழ்ந்துவருகிறேன். எனது மகள் சொன்னபடி கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளேன். இதன் மூலம் எனது மகள் உயிருடன் வாழ்வதாக நினைக்கிறேன். வெளியில் தெரியாமல் பல தர்ம காரியங்கள் செய்துவருகிறேன்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x