Published : 12 Dec 2023 03:11 PM
Last Updated : 12 Dec 2023 03:11 PM

மதுரையில் 900 ஆண்டுகள் பழமையான இடைக்கால பாண்டியர் கலை பாணி விநாயகர் சிற்பம் கண்டெடுப்பு

விநாயகர் சிற்பம்

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 900 ஆண்டுகளுக்கு முற்பட்ட இடைக்கால பாண்டியர் கலை பாணியிலான விநாயகர் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் கள்ளிக்குடி அருகே நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் பழமையான சிலை இருப்பதாக நாக ரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்களான முரளிதரன், தர்மராஜா ஆகியோர் தகவல் தெரிவித்தனர். அதன்படி அக்கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் தாமரைக் கண்ணன் மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அதில், அந்த சிலையானது 900 ஆண்டுகளுக்கு முற்பட்ட, இடைக்கால பாண்டியரின் சிற்பம் என்பது தெரிந்தது. இது குறித்து பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்கள் தாமரைக் கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் கூறியது:

“கள்ளிக்குடி அருகே நல்லம நாயக்கன் பட்டியில் 3 அடி உயரம், 2 அடி அகலமும் உடைய பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக விநாயகர் சிலை செதுக்கப்பட்டுள்ளது. தலைப் பகுதி கரண்ட மகுடமும், அகன்ற காதுகளும் நீண்டு வளைந்த துதிக்கையுடன் 4 கரங்களுடனும் செதுக்கப்பட்டுள்ளது. வலது மேற்கரத்தில் மழுவும், இடது மேற்கரத்தில் பாசம் என்கிற ஆயுதத்துடனும் வலது முன் கரத்தில் உடைந்த தந்தத்தை பிடித்த படியும், இடது முன்கரத்தில் மோதகத்தை வைத்தபடியும், மோதகத்தை துதிக்கையினால் உண்டபடியும் சிற்பம் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது.

சிற்பத்தின் வலது காலை குத்த வைத்தும் இடது காலை மடக்கியும் அகன்ற பெரிய வயிற்றுப் பகுதி அமர்ந்த திண்டின் மீது படும் படியும் சிற்பம் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் வடிவமைப்பை வைத்து இடைக்கால பாண்டியர் கலை பாணியில் அமைந்த சிற்பம் எனக் கருதலாம். தற்போது இதனை செல்வ விநாயகர் கோயிலாக கிராமப் பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்” என்று அவர் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x