Published : 08 Dec 2023 12:07 PM
Last Updated : 08 Dec 2023 12:07 PM

138-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மதுரை ஏ.வி. மேம்பாலம் - கட்டிடக் கலைக்கு சான்று!

மதுரை ஏ.வி. மேம்பாலம்.

மதுரை: மதுரை வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கோரிப்பாளையம் ஏ.வி. மேம்பாலம், பயன்பாட்டுக்கு வந்து 138-வது ஆண்டில் அடியெடித்து வைத்துள்ளது. நூறாண்டுகளை கடந்தும் கம்பீரமாக இருக்கும் இம்மேம்பாலம் கட்டிடக் கலைக்கு சான்றாக அமைந்துள்ளது. கட்டும்போது இருந்த அதே கம்பீரமும், ஸ்தரத்தன்மையும் குறையாமல் இன்று 8ம் தேதி 138வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. மதுரையில் வைகையின் தென்பகுதிக்கும், வடபகுதிக்கும் இடையே பாலம் இல்லாததால் முந்தைய காலங்களில் படகுகள் மூலமே போக்குவரத்து நடந்துள்ளது. மக்கள் படகில் ஏறுவதற்கும், குளிப்பதற்கும் பல இடங்களில் படித்துறைகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இரு பகுதிகளுக்கும் சென்று வருவதில் சிரமத்தை சந்தித்தனர். இதையடுத்து ஆற்றின் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் கோரிப்பாளையத்தில் 1884-ம் ஆண்டில் மேம்பாலம் கட்டுமானப் பணியை தொடங்கினர். ஆங்கிலேயரின் அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்த பாலம் கட்டப்பட்டாலும், தமிழர்களின் பாரம்பரிய கட்டுமான முறைப்படி கருங்கல், சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி போன்றவை பயன்படுத்தப்பட்டன. பாலம் 40 அடி அகலமும், 820 அடி நீளமும் கொண்டது. இப்பாலத்தை கட்டி முடிக்க அன்றைய மதிப்பீட்டின்படி ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்து 697 செலவானது.

1886-ம் ஆண்டு டிச. 8-ம் தேதி இப்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது. ஆல்பர்ட் விக்டர் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இப்பாலத்தை சுருக்கமாக ‘ஏ.வி.’ மேம்பாலம் என அனைவரும் குறிப்பிடத் தொடங்கினர். இந்த பாலம் கட்டப்பட்டபோது 50 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அதையும் தாண்டி நூறாண்டுகளை கடந்து பாலம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இன்றும் போக்குவரத்துக்கு பயன்படும் இப்பாலம், தனது 138-வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.

நாடு சுதந்திரமடைந்த பின்பு மதுரையில் கட்டப்பட்ட பல பாலங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. ஆனால், ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஏ.வி. மேம்பாலம் மட்டும் இன்னும் கம்பீரம் குறையாமல் உள்ளது. ஆனால், பாலத்தை முறையாக பராமரிக்காததால் தூண் பகுதிகளில் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜன்

இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில், தமிழக அரசு இந்த பாலத்தை பாரம்பிரய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும். தென் கரையிலிருந்து 2, 7, 8-வது வளைவு தூண்களின் அடிப்பகுதி உதிர்ந்து காணப்படுவதால் நெடுஞ்சாலைத் துறை பழைய கட்டுமான முறைப்படி பழமை மாறாமல் பராமரிக்க வேண்டும்.அரசு அதிகாரிகளின் கவனக்குறைவால் பாலத்தின் மேற்புறத்தில் தார் சாலைகள் அடுக்கடுக்காக சேர்ந்து பாலத்தின் சுமை நாளுக்கு நாள் கூடி வருகிறது. அந்த பாரம் பாலத்தின் உறுதித்தன்மைக்கு கேடு விளைவிக்கிறது. பாலத்தின் மேல் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும்போது அடிப்பகுதியில் உள்ள தாரை அப்புறப்படுத்திவிட்டு புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும். பாலத்தின் கைப்பிடி சுவர்கள் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. அவற்றை சரி செய்ய வேண்டும். டிசம்பர் 8-ம் தேதி ஆல்பர்ட் விக்டர் பாலம் 138-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு இந்த பாலத்தின் வரலாற்றை தெரிவிக்கும் வகையில் பாலத்தின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x