Last Updated : 12 Oct, 2023 03:11 PM

 

Published : 12 Oct 2023 03:11 PM
Last Updated : 12 Oct 2023 03:11 PM

திருப்பத்தூர் மாவட்டத்தில் நினைவு சின்னமான 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆர்மா மலைக்குகை - ஒரு பார்வை

ஆம்பூர் அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் உள்ள நினைவு சின்னமான ஆர்மா மலைக்குகையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி உள்ளிட்டோர்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக கருதப்படும் மலையாம்பட்டு ஆர்மா மலைக்குகையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் மலையாம்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த ஆர்மா மலைக்குகை உள்ளது. இந்த மலைக்குகை 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அந்த காலத்தில் வசித்த அப்பகுதி மக்கள் வேட்டையாட ஆர்மா மலைப்பகுதிக்கு சென்றபோது, அங்கு மலைக்குகை ஒன்றை அமைத்துள்ளனர். மண் மற்றும் சுடாத செங்கற்களால் கட்டப்பட்ட சமண பெரியவர்கள் இந்த மலைக்குகையில் தங்கியதாக வரலாறுகள் கூறுகின்றன.

மேலும், இந்த குகையின் மேற்கூரையில் அழகிய வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இந்த அழகிய ஓவியங்கள் சமணம் மற்றும் 8 திசைகள் பற்றிய சிறப்பை கதையாக சித்திகரிப்பதாக உள்ளது.

குகையின் மேல்தளம் சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியமானது சித்தன்னவாசல் ஓவியங்களை போன்று காணப்படுவதாலும், 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மலைக்குகை என்பதால் இதை நினைவுச்சின்னமாக பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று தொல்லியல் துறையினர் இந்த மலைக்குகையை கடந்தாண்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து, சிதிலமடைந்து காணப்பட்ட ஆர்மா மலைக்குகையை ரூ.20 லட்சம் செலவில் தொல்லியல் துறையினர் புனரமைத்துள்ளனர்.

ஆர்மா மலைக்கு செல்லும் வழிப்பாதைகள், படிக்கட்டுகள், பக்கவாட்டு சுவர்கள், அறிவிப்பு பலகைகள் என சுற்றுலா பயணிகள் வந்து ஆர்மா மலையின் அழகையும், பழங்கால மக்கள் வாழ்ந்த தடத்தையும் காண்பதற்கான ஏற்பாடுகளை தொல்லியல் துறையினர் செய்தனர். இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரே நினைவு சின்னமாக ஆர்மா மலைக்குகை உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு பழங்கால வரலாற்று சின்னங்கள், தொல்லியல் சிறப்பிடங்கள் மற்றும் எஞ்சிய சின்னங்கள் சட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தின் நினைவு சின்னமாக ஆர்மா மலைக்குகையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மலைப்பாதைக்கு நடந்து சென்ற ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மலையின் அழகையும், மலைக்குகையில் வரையப்பட்ட பழங்கால ஓவியங்கள், அந்த ஓவியங்களுக்கு தீட்டப்பட்ட அழகிய வண்ணங்களை கண்டு ரசித்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, தொல்லியல் துறையினர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இது குறித்து தொல்லியல் துறை உதவி பொறியாளர் ராஜேஷ், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘ திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு மலைகள் இருந்தாலும், ஆம்பூர் அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் உள்ள ஆர்மா மலை நினைவு சின்னமாகவும், பாதுகாக்கப்பட்ட சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்தாண்டு ரூ.20 லட்சம் செலவில் அங்கு புனரமைப்பு பணிகளை தொல்லியல் துறை மேற்கொண்டது.

இந்த மலையானது 74.94 ஹெக்டேர் பரப்பு கொண்டது. மலையைச் சுற்றிலும் மூலிகை மரங்களும், செடிகளும் நிறைந்து இருப்பதால் இந்த மலை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மலைக்கு செல்லும் பாதைகள், வழித்தடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. வரலாற்று சிறப்புமிக்க ஆர்மா மலைக்குகையை பற்றி பல்வேறு கருத்துகள் அப்பகுதி மக்களிடையே நிலவி வருகிறது.

பாண்டவர்கள் இந்த மலையில் தங்கியதாக பல வதந்திகளும் அங்கு பரவி வருகிறது. அந்த கால மக்கள் இந்த மலையை உருவாக்கி, மலையில் ஒரு குகையையும் உருவாக்கி, அதில் அழகிய ஓவியங்களை வரைந்துள்ளனர். பல சிறப்புகளை பெற்றதால் ஆர்மா மலைக்குகை நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x