Last Updated : 29 Jul, 2023 12:34 PM

2  

Published : 29 Jul 2023 12:34 PM
Last Updated : 29 Jul 2023 12:34 PM

அல்லா சுவாமிக்கு 10 நாள் ‘மொஹரம்’ விழா - தஞ்சை கிராமத்தில் 300 ஆண்டுகளாக தொடரும் இந்துக்களின் வழிபாடு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே 300 ஆண்டுகளுக்கும் மேலாக, இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகையை ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பத்து நாட்கள் விரதம் இருந்து, தீயில் இறங்கி மிகுந்த பயபக்தியுடன் நேர்த்திக் கடனை நிறைவேற்றி வழிபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே காசவளநாடு புதூர் கிராமத்தில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்களின் பண்டிகையான மொஹரம் பண்டிகையின்போது இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. காசவளநாடு புதூர் கிராமத்தில் நான்கைந்து தலைமுறையாக அல்லாவுக்கு விழா எடுக்கும் இந்துக்கள், இதற்காக பத்து நாளைக்கு முன்பாக ஊரின் மையப்பகுதியான செங்கரையில் உள்ள சாவடியில் (ஊரின் பொதுவான இடம்) உள்ள “அல்லா சுவாமி” என்றழைக்கப்படும், கை உருவம் கொண்ட பொருட்களை தனியாக எடுத்து பந்தல் அமைத்து, விரதம் இருந்து, தினமும் அதற்கு பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதி, மொஹரம் திருநாளில் இரவு முழுவதும் வீடு வீடாக வீதியுலா சென்று மறுநாள் காலையில் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.

அதன்படி கடந்த 10 தினங்களுக்கு முன் கை உருவத்தை வெளியே எடுத்து வைத்தனர். தினமும் காலை, மாலை இரு வேளையும் பாத்தியா ஓதி வழிபாடு நடத்தினர். இதைத் தொடர்ந்து நேற்று இரவு அல்லா சுவாமிக்கு மாலை அணிவித்து வீதியுலாவாக ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் சென்றனர். அங்கு வீடுகளில் புது மண் கலயத்தில் பானகம், அவல், தேங்காய், பழம், மாலைகள் அணிவித்து அல்லா சுவாமியை கிராம மக்கள் வரவேற்றனர். நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை கிராமம் முழுவதிலும் உள்ள வீடுகளுக்கு இந்த அல்லா சுவாமி சென்றது.

பின்னர் மீண்டும் செங்கரையில் சாவடிக்கு வந்ததும், அங்கு தீமிதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அப்போது அல்லா சுவாமியை தூக்கி வந்தவர்கள் முதலில் தீயில் இறங்கினர். இதைத் தொடர்ந்து நேர்த்திக் கடன் செலுத்த காத்திருந்த ஏராளமானோர் தீயில் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர்.

இதுகுறித்து காசவளநாடு புதூரை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், "இஸ்லாமியரின் பண்டிகையான மொஹரம் பண்டிகையை இந்துக்கள் அதிகம் உள்ள எங்களது ஊரில் எங்களது முன்னோர்கள் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து பாரம்பரியமாக 300 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கொண்டாடி வருகிறோம்.

இவ்விழாவை இந்துக்கள் கொண்டாடும்போது இஸ்லாமியர்களும் உடன் இருந்து அவர்களும் வழிபடுகின்றனர். இதற்காக பத்து நாள் விரதமும் இருக்கிறோம். அல்லா என்று எங்களால் அழைக்கப்படும் கை உருவம் தாங்கியவற்றை நாங்கள் "கரகம்" எடுப்பது போல் அதற்கு பூக்களால் அலங்கரித்து, பட்டுத்துணிகளை போர்த்தி, இரவு முழுவதும் வீடு வீடாக சென்ற பின்னர், விடியற்காலையில் அல்லாவை வணங்கி, வேண்டுதலை நிறைவேற்ற தீமிதி இறங்குவோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x