Published : 09 Jul 2023 02:15 PM
Last Updated : 09 Jul 2023 02:15 PM

சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையானது பொருநை நாகரிகம்: தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து

தூத்துக்குடி: சிவகளையில் கண்டெடுத்த முதுமக்கள் தாழியில் உள்ள உமியின் காலம் சுமார் 5 ஆயிரம் ஆண்டு பழமையானது என கண்டறியப் பட்டுள்ளதால் பொருநை கரை நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முந்தையது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 7-ஆம் தேதி தொடங்கி இன்று (9-ம் தேதி) வரை நடக்கிறது.

இந்த மாநாட்டில் “சமீபத்திய தொல்பொருள் ஆராய்ச்சியும் தமிழர்களின் கலாச்சாரத்தில் இதன் தாக்கமும்” என்ற தலைப்பில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆலோசகர் முனைவர் ராஜன் பேசும்போது, ‘‘ தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் கண்டெடுத்த முதுமக்கள் தாழியில் உள்ள உமி சுமார் 5 ஆயிரம் ஆண்டு பழமையானது. இதனால் சிந்து சமவெளிக்கு இணையாக தாமிரபரணி கரை நாகரிகம் பேசப்படும், என தெரிவித்துள்ளார். அவரது கருத்து தொல்லியல் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து திருநெல்வேலி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் இயக்குநர் முனைவர் சுதாகர் கூறியதாவது: சமீபத்திய தொல்பொருள் ஆராய்ச்சி பொருநை நாகரிகத்தின் காலம் சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையானது எனக் கண்டறிந்துள்ளது. சிந்து சமவெளி நாகரிக மக்கள் இரும்பு பொருட்கள் பற்றிய நுட்பங்களை அறியவில்லை.

ஆனால் பொருநை நாகரிக மக்கள் 4,500 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பில் ஆயுதங்கள் செய்து வாழ்ந்துள்ளனர். எனவே, பொருநை கரை நாகரிகத்தை சிந்து சமவெளிக்கு முந்தையது எனக் கூட கூறவாய்ப்புள்ளது. இரு நாகரிக மக்களுக்கும் தொடர்பு இருந்திருக்க வாய்ப்புள்ளது எனவும் நம்பப்படுகிறது.

பொருநை கரையில் சிவகளையில் பானையில் கண்டெடுக்கப்பட்ட இரும்புப் பொருட்கள் 4,500 ஆண்டுகள் பழமையானது என்றால் மிகையாகாது. 4,500 ஆண்டுக்கு முன்பே தமிழன் இரும்பு வாள் தயாரித்து பயன்படுத்தியுள்ளான். இதனைக் கண்டறிய முதலில் “இந்த இடத்தில்தான் இரும்பு உள்ளது?” எனத் தெரிய வேண்டும்.

பின்னர் அங்குள்ள மண்ணை அள்ளி அதனில் இருந்து இரும்பை பிரித்தெடுக்க வேண்டும். அவ்வாறு பிரித்தெடுத்த இரும்பை வைத்து எந்த வகையான பொருட்களாக மற்றும் ஆயுதமாக வடித்தெடுக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும். இந்த வேலைகள் அனைத்தையும் முடிக்கப் பல தொழில் நுட்பம் வேண்டும்.

இந்த பரிணாமத்துக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலான காலம் எடுத்திருக்கும் என்பது என் கருத்து. அதனால் தமிழர்களுக்கு 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பைப் பற்றிய அறிவு மற்றும் நுட்பம் இருந்துள்ளது. எப்படி தற்போதுள்ள மொழிகளில் பழமையானது தமிழ் என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளதோ? அதுமாதிரி இரும்பை முதன் முதலில் கண்டறிந்தது தமிழன் என்ற வாக்கியம் உலக நாடுகளின் பாடப்புத்தகங்களில் வருவது உறுதி, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x