நாடக விமர்சனம்: வெந்து தணிந்தது

நாடக விமர்சனம்: வெந்து தணிந்தது

Published on

நகைச்சுவை என்னும் பெயரில் துணுக்குத் தோரணங்களாக நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்நாளில், முழுக்க முழுக்க விழிப்புணர்வை உள்ளீடாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நாடகம் ‘வெந்த தணிந்தது’.

அண்ணா பல்கலைக்கழக கலாச்சாரக் குழு, உலகச் சுற்றுச்சூழல் தினத்தில் பாரதிய வித்யா பவன் அரங்கத்தில் இந் நாடகத்தை அரங்கேற்றியது. 76-வது முறையாக அரங்கேறும் இதை எழுதி இயக்கியதோடு சுந்தரம் வாத்தியாராக முழு நாடகத்தையும் சுமந்திருக்கும் ஜி.சிவக்குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இயற்கையிலேயே பசுமை பூத்துக்குலுங்கும் ஒரு கிராமத்தின் வளங்களை அழித்து ஆக்ஸிஜன் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாகிறது. அதிலிருந்து வரும் புகையால் மொத்த கிராமமும் பாதிக்கிறது. தொழிற்சாலைக்கு அரசியல்வாதியின் ஆதரவு இருப்பதால் மக்கள் திகைக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் தொழிற்சாலை நிர்வாகத்தை, வாத்தியார் சுந்தரம் கேள்வி கேட்கிறார். அவருக்கு ஆதரவாக கிராமம் துணை நிற்கிறது. தொழிற்சாலை நிர்வாகமோ, அந்தக் கிராமத்தை ஒட்டியிருக்கும் காட்டுப் பகுதிகளை அழித்து மேலும் விரிவாக்க நினைக்கிறது. இதை எதிர்த்து மக்கள், வழக்கு தொடுக்கின்றனர். வழக்கின் முடிவு யாருக்கு சாதகமாக வருகிறது என்பதை உணர்ச்சிபூர்வமான காட்சிகளுடன் விவரிக்கிறது நாடகம்.

கிச்சாவின் ஒலியும் ஒளியும் இதம். பத்மா ஸ்டேஜ் கண்ணனின் உழைப்பில் நீதிமன்றகாட்சிகள் மேடையில் கவனம் ஈர்த்தன. சின்ன வேடங்களில் நடித்த கலைஞர்கள்கூட தங்களின் பாத்திரம் அறிந்து அளவாக நடித்தனர். சமூக சேவகி, கலெக்டராக தோன்றும் டாக்டர் சி.சர்மிளா, பூ விற்பவராக நடித்த திவ்யா போன்றவர்களின் நடிப்பு குறிப்பிடும்படி இருந்தது. இயற்கை வளங்களை அழித்துவிட்டுத்தான் வளர்ச்சி திட்டங்கள் வரும் என்றால், அப்படிப்பட்ட திட்டங்கள் தேவையில்லை என்னும் மக்களின் குரலை எதிரொலிக்கிறது நாடகம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in