

பிஹார் இளைஞர் ரஞ்சித் குமார்
பாட்னா: பிஹாரின் ஷேக்புரா மாவட்டம் பதேபூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். யுபிஎஸ்சி நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், 440-வது ரேங்க் பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆகியுள்ளதாக கிராம மக்களிடம் ரஞ்சித் குமார் கூறிஉள்ளார்.
இதையடுத்து கிராமமே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இத்தகவல் சமூக ஊடகத்திலும் பரவிய நிலையில் ஷேக்புரா தொகுதி முன்னாள் ஆர்ஜேடிஎம்எல்ஏ விஜய் சாம்ராட் தனது ஆதரவாளர்களுடன் ரஞ்சித் குமார் வீட்டுக்கு வந்தார். பூங்கொத்தும் பரிசும் கொடுத்து வாழ்த்தினார். ரஞ்சித் குமாரை உள்ளூர் போலீஸார் மஹுலி காவல் நிலையத்துக்கு அழைத்து அவருக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி, வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தனர்.
எனினும் இந்த கொண்டாட்டம் வெகுநேரம் நீடிக்கவில்லை. கிராமத்தின் இளைஞர்கள் சிலர் யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளை சரிபார்த்த போது, 440-வது ரேங்க் பெற்றது ஷேக்புரா ரஞ்சித் குமார் அல்ல, கர்நாடகாவின் சிக்கபள்ளாபூரை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பது தெரிய வந்தது.
இது குறித்து மஹுலி காவல் நிலைய அதிகாரி ராம் பிரவேஷ் பார்தி கூறுகையில், “தகவல் அறிந்து ரஞ்சித் குமார் வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவர் டெல்லி சென்றுள்ளதாகவும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிப்பதில்லை எனவும் குடும்பத்தினர் கூறினர். யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக ரஞ்சித் வேண்டும் என்றே ஏமாற்றினாரா அல்லது தான் தேர்ச்சி பெற்றுவிட்டதாக தவறுதலாக நம்பினாரா என விசாரித்து வருகிறோம்” என்றார்.