வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம்: சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
2 min read

புதுடெல்லி: தேர்வு வினாத்தாள் கசிந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது.

தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; அதன் பிறகுதான் பேச்சுவார்த்தையிலோ அல்லது விவாதத்திலோ பங்கேற்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக சிஜேபி பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று நடத்திய பேச்சுவார்த்தையிலும், தீர்வு காணப்படவில்லை. அவர்களும் தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் மட்டுமே போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம் என அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அரசாங்கத்தில் நடத்தப்பட்ட விவாதங்கள் குறித்து நாளை (சனிக்கிழமை) மீண்டும் சந்தித்து விளக்குவதாக சிஜேபி பிரதிநிதிகளிடம் தெரிவித்திருப்பதாக அரசு சார்பிலான பேச்சுவார்த்தைக் குழுவுக்கு தலைமை வகித்த ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேர்வு முறைகேடுகளைத் தடுப்பதற்கான ‘பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்) சட்டம் 2024’-ல் கடுமையான திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

‘பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்) சட்டம் 2024’- ன்படி, தற்போது குற்றவாளிகளுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்க முடியும்.

சட்டத் திருத்தம் நிறைவேறிய பிறகு, சிறைத் தண்டனை 5 முதல் 10 ஆண்டுகள் வரையும், அபராதம் ரூ.10 கோடியும் விதிக்க முடியும்.

எனினும், மத்திய கேபினெட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினை வைஷ்ணவ், சட்டத் திருத்தம் குறித்த விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

பிரதமர் மோடி உறுதி:

முன்னதாக, பிரதமர் மோடி வெளியிட்ட செல்ஃபி வீடியோ பதிவில், “விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளுக்கான விதிகளை உள்ளடக்கிய வரைவுச் சட்டத்தைத் தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். இந்த வரைவுச் சட்டம் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு இறுதி வடிவம் பெறவுள்ளது. வரும் திங்கள்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் இரண்டாவது வாரத்தில் இந்த மசோதாவை இரு அவைகளிலும் விரைவாக நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்று உறுதியளித்திருந்தது கவனிக்கத்தக்கது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
சிஜேபி பிரதிநிதிகளுடன் பேசியது என்ன? - மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா விவரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in