புதுடெல்லி: போராட்டக் குழுவின் கோரிக்கைகள் தொடர்பாக அரசுக்குள் நடைபெற்ற விவாதங்கள் குறித்த தகவல்களை நாளை தெரிவிப்பதாக சிஜேபியினரிடம் கூறியுள்ளோம் என்று பேச்சுவார்த்தைக்குப் பின் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தியது.
மத்திய அரசு சார்பில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவும், பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கும் கலந்து கொண்டனர். சிஜேபி சார்பில், அதன் தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் மற்றும் தேசிய செய்தித் தொடர்பாளர் ஆசுதோஷ் ரங்கா ஆகியோர் கலந்து கொண்டனர். டெல்லியில் உள்ள விட்டல் படேல் இல்லத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி.நட்டா, “இந்தச் சந்திப்பு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்தது. அவர்களிடம் 3 முக்கிய கோரிக்கைகளும், தேர்வு சீர்திருத்தம் தொடர்பாக ஐந்து ஆலோசனைகளும் இருந்தன. அவர்களின் கவலைகளை நாங்கள் கேட்டறிந்தோம். பல்வேறு கண்ணோட்டங்களில் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசுக்குள் நடைபெற்ற விவாதங்கள் குறித்த தகவல்களை நாளை மதியம் மீண்டும் சந்தித்து அவர்களுக்கு தெரிவிப்பதாகக் கூறியுள்ளோம்” என தெரிவித்தார்.
சந்திப்புக்குப் பிறகு ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய சவுரவ் தாஸ், “நாங்கள் அங்கு சென்றபோது மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டாவும், டாக்டர் ஜிதேந்திர சிங்கும் இருந்தார்கள். நமது மூன்று முக்கிய கோரிக்கைகளை வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் நாங்கள் தெளிவாக தெரிவித்தோம்.
முதல் கோரிக்கை, தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் அல்லது பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதில் எந்த சமரசமும் இல்லை. இரண்டாவது கோரிக்கை, நீட் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இதிலும், சமரசத்துக்கு இடமில்லை.
மூன்றாவது கோரிக்கை, இங்கே அமைதியான முறையில் போராடியோர் மீது போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை திரும்பப் பெற வேண்டும். எதிர்காலத்திலும் யாரும் குறிவைக்கப்படக்கூடாது என்பதாகும். இதற்கான உத்தரவாதத்தை எழுத்துப்பூர்வமாக அரசு எங்களுக்கு வழங்க வேண்டும் என்று நாங்கள் தெரிவித்தோம்.
அதோடு, நான்காவது கோரிக்கையாக, தேர்வு சீர்திருத்தம் தொடர்பான ஐந்து அம்ச கொள்கை கோரிக்கைகளை அளித்துள்ளோம். இரண்டாவது மற்றும் மூன்றாவது கோரிக்கைகளுக்கு அரசு சாதகமான பதிலை அளித்துள்ளது. கொள்கை அளவில் இந்த இரண்டு கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதாக அரசு கூறியது. நாளை மற்றொரு சந்திப்புக்கு நாங்கள் அழைக்கப்பட்டுள்ளோம்” என தெரிவித்தார்.
இதனிடையே, கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.