

கோப்புப்படம்
புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ல் முடிந்தது. பொதுவாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்படும், ஆனால் 8 நாட்களாகியும் கூட்டத் தொடர் முறையாக ஒத்திவைக்கப்படவில்லை.
தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு மீண்டும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இதன் காரணமாகவே நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முறைப்படி ஒத்தி வைக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டிருக்கிறது. மசோதாவை நிறைவேற்றுதற்காக மழைக்காலக் கூட்டத்தொடரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெற்கு மண்டல கவுன்சிலின் 31-வது கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது தென் மாநில அரசுகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடத்திய பேச்சுவார்த்தையில் தொகுதி மறுவரையறை குறித்தும் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை நிறைவேற்ற மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை பலம் தேவை. இதற்காக திமுக உள்ளிட்ட கட்சிகளிடம் மத்திய அரசு ஆதரவு கோரி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதே விவகாரம் தொடர்பாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனும் மத்திய அரசு திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தாவிடம் இருந்து 20 எம்பிக்கள் தனியாகப் பிரிந்தனர்.
மகாராஷ்டிராவின் சிவசேனா யுபிடியிலும் பிளவு ஏற்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலான எம்பிக்கள், மசோதாவை ஆதரிக்க மத்திய அரசுடன் பேரம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக அவர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் கோரி வருவதாகத் தெரிகிறது.
மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் இதன்பிறகு தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு மீண்டும் கையில் எடுக்கும் என்றும் கூறப்படுகிறது. மக்களவையில் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசுக்கு 360 எம்பிக்கள் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.