

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் கட்சி எம்எல்ஏ ஹுமாயூன் கபீர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்ததால் கட்சியில் இருந்து கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், முர்ஷிதாபாத்தில் டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி கட்டுவதற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து ஹுமாயுன் கபீர் கூறும்போது, “பாபர் மசூதி கட்டுவதற்கு முஸ்லிம்களிடமும் ஏராளமான பணம் உள்ளது. அவர்களும் மசூதி கட்ட உதவுவார்கள். வரும் 22-ம் தேதி என்னுடைய புதிய கட்சி பற்றி அறிவிப்பேன்.
திரிணமூல் காங்கிரஸ் முஸ்லிம் வாக்கு வங்கியை இழந்துவிட்டது. வரும் தேர்தலில் இக்கட்சி வெற்றி பெறாது. அதேநேரம், பாஜக ஆட்சிக்கு வரவும் அனுமதிக்க மாட்டேன்’’ என்றார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் சமிக் பட்டாச்சார்யா கூறும்போது, “இது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் திட்டமிட்ட செயல்’’ என்றார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார் கூறும்போது, ‘‘மசூதி கட்டுவதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், பாபர் பெயரில் மசூதி கட்டப்போவதாகக் கூறுவது இந்துக்களை அவமதிக்கும் செயல். இதை ஏற்க முடியாது’’ என்றார்.