

பெங்களூரு: கேரளாவை சேர்ந்த 50 வயது தொழிலதிபர், பெங்களூருவில் உள்ள மடிவாளாவில் தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் அங்கு வந்த சிஐடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் கனககிரி, அறையை சோதனை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் தனது நண்பர்கள் வசந்த் குமார், குபேந்திர ரெட்டி ஆகியோருடன் சேர்ந்து தொழிலதிபரை தாக்கி, அவரிடம் இருந்து ரூ.20 லட்சத்தை பறித்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து, மடிவாளா காவல் நிலையத்தில் தொழிலதிபர் புகார் அளித்தார். தனியார் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்த போலீஸார், சிஐடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் கனககிரியை அடையாளம் கண்டனர்.
பின்னர் அவரது செல்போன் பயன்பாட்டை வைத்து அவரை கோரமங்களாவில் மடக்கிப் பிடித்தனர். அவரைத் தொடர்ந்து வசந்த் குமார், குபேந்திர ரெட்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து துணை ஆணையர் முகமது சுஜீதா கூறுகையில், ‘‘ரூ.20 லட்சம் கொள்ளையடித்த சிஐடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் கனககிரி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயன்படுத்திய அரசு வாகனத்தைப் பறிமுதல் செய்துள்ளோம். அதுகுறித்து விசாரித்து வருகிறோம்’’ என்றார்.