

புதுடெல்லி: நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடல் இசைக்கப்பட்டு வியாழக்கிழமை அவை நடவடிக்கைகள் தொடங்கின.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று, அவையின் நடவடிக்கைகள் தொடங்கியதும் வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்கள் இசைக்கப்பட்டன. அப்போது பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று தேசியப் பாடலுக்கு மரியாதை செலுத்தினர். தேசியப் பாடலுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்த நிலையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நாடாளுமன்றத்தில் அரங்கேறியுள்ளது.
தேசிய கீதத்துக்கு இணையான சட்டப்பூர்வ அந்தஸ்தை வந்தே மாதரத்துக்கு வழங்கும் இப்புதிய சட்டத்தின்படி, தேசியப் பாடலை வேண்டுமென்றே தடுப்பதோ அல்லது இடையூறு விளைவிப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகும். முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அரசாணையில், குடியரசுத் தலைவர் வருகை, தேசியக் கொடி ஏற்றுதல் மற்றும் ஆளுநர்களின் உரைகளின் போது வந்தே மாதரத்தின் ஆறு சரணங்களும் இசைக்கப்பட வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன.
தேசியப் பாடல் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு நடுவே மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. வழக்கமாக கூட்டத்தொடரின் நிறைவு நாளில் கூட்டத்தொடர் செயல்பாடு குறித்த சபாநாயகரின் நிறைவுரையை சபாநாயகர் ஓம் பிர்லா இம்முறை வாசிக்கவில்லை.
ஜூலை 20-ல் நாடாளுமன்றம் தொடங்கியதில் இருந்தே நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் ராமர் கோயில் நன்கொடை முறைகேடு புகார்கள் தொடர்பாக இரு அவைகளின் நடவடிக்கைகளும் தொடர்ந்து முடங்கின.