இந்தியாவில் கட்டுப்பாடுகள் கொண்ட கோயில்கள்: சபரிமலை வழக்கில் பட்டியலிட்ட மத்திய அரசு

உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதம் என்ன?
இந்தியாவில் கட்டுப்பாடுகள் கொண்ட கோயில்கள்: சபரிமலை வழக்கில் பட்டியலிட்ட மத்திய அரசு
Updated on
2 min read

புதுடெல்லி: இந்தியாவில் புஷ்கரின் பிரம்மா, அசாமின் காமாக்யா ஆலயம் உள்ளிட்ட கோயில்களின் மரபுகளை மத்திய அரசு பட்டியலிட்டது. இதை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் சபரிமலையில் பெண்கள் நுழையும் வழக்கில் நீதிபதிகள் அமர்வின் முன் தெரிவித்தது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி பி.வி.நாகரத்தினா அடங்கிய 9 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

பெண்கள் மீதான தடையை மத்திய அரசும் ஆதரித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அரசு நிலைப்பாட்டை ஆதரித்து வழக்காடினார். இதில், நாட்டின் பிற ஆலயங்களில் பின்பற்றப்படும் மரபுகளைச் சுட்டிக்காட்டினார்.

இந்த வகையான நடைமுறைகள் பாலினப் பாகுபாட்டின் ஒரு பகுதியல்ல என்றும், மாறாக அவை மதச்சடங்குகள், நம்பிக்கை மற்றும் விஸ்வாசம் ஆகியவற்றின் ஒரு பகுதியே என்றும் துஷார் வாதிட்டார். இது நீதிமன்றத்தின் நீதித்துறை மறு ஆய்வு வரம்புக்குள் வராது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோயில்களின் இந்தச் சடங்குகள், நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் ஆகியவை இந்திய அரசியலமைப்பின் 25 மற்றும் 26-வது பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளன எனவும் விளக்கினார்.

இது குறித்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தன் வாதத்தில் பேசுகையில், ‘பண்டைய காலங்களிலிருந்தே பெண்களைப் போற்றி வணங்கும் கொள்கையைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருவது இந்து மதமே ஆகும்.

இந்து மதம் பெண்களை ஆண்களுக்குச் சமமாக அங்கீகரித்தது மட்டுமல்லாமல், ஆண்களை விட மிக உயர்ந்த அந்தஸ்தையும் அவர்களுக்கு வழங்கியுள்ளது. உலகிலேயே பெண் தெய்வங்கள் இந்தியாவில்தான் அதிகமாக வழிபடப்படுகின்றனர்.

ஆண்களே அந்தப் புனிதமான ‘பெண் தெய்வங்களின்’ பாதங்களைத் தொட்டு வணங்கி பக்தர்களாகத் திகழும் ஒரே மதம் இந்து மதம் மட்டுமே என்று உறுதியாகக் கூறலாம். பாலின அடிப்படையில் ஆலயத்துக்குள் நுழைவதை அனுமதிப்பது என்பது ‘பாலினப் பாகுபாடு’ சார்ந்த விவகாரம் அல்ல. மாறாக, அது மதச்சடங்குகள், நம்பிக்கை மற்றும் விஸ்வாசம் சார்ந்த விவகாரமே. எனவே, அது நீதிமன்றத்தின் நீதித்துறை மறு ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டது என்று நிரூபிக்கும் பல உதாரணங்கள் உள்ளன’ எனத் தெரிவித்தார்.

இதற்கு உதாரணங்களாக உச்ச நீதிமன்றத்தில் துஷார் மேத்தா குறிப்பிட்ட பட்டியல் விவரம்:

ஆத்துக்கால் ஆலயம்: கேரளாவில் அமைந்துள்ள ஆத்துக்கால் பகவதி ஆலயம், பெண்களை முதன்மையாகக் கொண்டு வழிபாடுகள் நடைபெறும் ஒரு தலமாகும். சுமார் 30 லட்சம் பெண்கள் கலந்துகொள்ளும் பொங்கல் திருவிழாவைச் சிறப்பாக நடத்தியதற்காக, இந்த ஆலயம் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது. இந்தத் திருவிழாவின்போது பெண்கள் மிகப் பெரிய அளவில் ஒரே இடத்தில் கூடும் இந்த ஆலயத்துக்குள் ஆண்கள் நுழைவதற்கு அனுமதி இல்லை.

சக்குலத்துக்காவு கோயில்: கேரளாவில் அமைந்துள்ள மற்றொரு பகவதி அம்மன் கோயிலான சக்குலத்துக்காவு கோயிலில், நாரி பூஜை எனப்படும் வருடாந்திரச் சடங்கு நடத்தப்படுகிறது. 10 நாட்கள் விரதமிருந்த பெண் பக்தர்களின் பாதங்களை ஆண் பூசாரிகள் கழுவி வழிபடுகின்றனர். இந்த நாரி பூஜை நேரத்தில், பெண்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

பிரம்மர் கோவில்: ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் அமைந்துள்ள, 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரம்மர் கோயில் அமைந்துள்ளது. இதில், திருமணமான ஆண்கள் உள்ளே நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே பிரம்மருக்கு என அமைந்த ஒரே கோயில் இது.

பகவதி அம்மன் கோயில்: தமிழகத்தின் கன்னியாகுமரியில் அமைந்துள்ள இக்கோயில், துர்கா தேவியை (பகவதி அம்மன்) மூலவராகக் கொண்டு விளங்குகிறது. புராணங்களின்படி, சதி தேவியின் முதுகெலும்பு விழுந்த இடமாக இக்கோயில் கருதப்படுகிறது. துறவின் தேவி எனப் போற்றப்படுவதால், இல்லறத்தைத் துறந்த துறவிகள் கோயிலின் வாயில் வரை அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், திருமணமான ஆண்கள் கோயிலுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாதா கோயில்: பிஹாரின் முசாபர்பூரில் அமைந்துள்ள இக்கோயிலில், குறிப்பிட்ட சில காலங்களில் ஆண்கள் உள்ளே நுழையக் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் விதிகள் மிகவும் கடுமையாக இருப்பதால், அக்காலங்களில் ஆண் பூசாரிகள் கூட கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அக்காலகட்டத்தில் பெண்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கொட்டன்குளங்கரா ஸ்ரீ தேவி கோவில்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாவாரா எனும் இடத்தில் கொட்டன்குளங்கரா ஸ்ரீ தேவி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், பெண்களைப் போல ஆண்கள் வேடமணிந்து, அன்னை தேவியின் மீதுள்ள தங்கள் பக்தியை வெளிப்படுத்துகின்றனர். சமயவிளக்கு என்று அழைக்கப்படும் இத்திருவிழா மரபு, பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான தென் மாநிலங்களிலிருந்தும் ஆண்கள் இத்திருவிழாவில் பங்கேற்க வருகிறார்கள்; இது மிகவும் பிரபலமான ஒரு விழாவாகத் திகழ்கிறது. இவ்வாறு அவர் பட்டியலிட்டார்.

இந்தியாவில் கட்டுப்பாடுகள் கொண்ட கோயில்கள்: சபரிமலை வழக்கில் பட்டியலிட்ட மத்திய அரசு
ஜனநாயகத்தை காக்கவே அசாம் மக்கள் வாக்களிக்கின்றனர் அகில் கோகோய் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in