

பிஜாப்பூர்: சத்தீஸ்கர் மாநில பஸ்தார் சரக ஐ.ஜி. சுந்தர்ராஜ் பட்டிலிங்கம் நேற்று கூறியதாவது: மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர் ரூபேஷ் சரணடைந்ததைத் தொடர்ந்து, கிளர்ச்சியாளர்களின் தளபதி பாப்பாராவ் என்பவருக்காகப் பெருமளவு ரொக்கம், தங்கம் பிஜாப்பூர் வனப்பகுதிக்கு மாற்றப்பட்டதாகத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், கடந்த 10 நாட்களாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மாவோயிஸ்ட்களின் மறைவிடம் கண்டறியப்பட்டது.
அங்கிருந்து சுவிஸ் முத்திரையுடன் கூடிய தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 7.2 கிலோ எடை கொண்ட இந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.11.16 கோடி.
தங்கக் கட்டிகளில் சுவிஸ் முத்திரை இருப்பதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தடயவியல் சோதனைகளுக்குப் பின்னரே இதன் தரம் மற்றும் உண்மைத்தன்மை குறித்துத் தெரியவரும். இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.