

கோப்புப்படம்
புதுடெல்லி: மேற்குவங்க எஸ்ஐஆர் பணிகள் தொடர்பான முரண்பாடுகள், ஆட்சேப மனுக்களை பரிசீலிக்க நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெறுகிறது. இதை எதிர்த்து அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த சூழலில் எஸ்ஐஆர் பணி தொடர்பான முரண்பாடுகள் மற்றும் ஆட்சேப மனுக்களை பரிசீலிக்க மாவட்ட நீதிபதிகள், மாவட்ட முன்னாள் நீதிபதிகளை பணியில் அமர்த்த கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘‘எஸ்ஐஆர் விவகாரத்தில் மேற்குவங்க அரசுக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும் இடையே நம்பிக்கை அற்ற சூழல் நிலவுவதை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடும் மாவட்ட நீதிபதிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க உத்தரவிடுகிறோம். எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது தொடர்பாக கூடுதல் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உத்தரவிடுகிறோம்’’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.