

புதுடெல்லி: தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ”ஜவஹர் நவோதயா பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றபடுகிறது. ஆனால் தமிழக அரசு இருமொழி கொள்கையை சட்டமாக்கியுள்ளது” என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், ”ஜவஹர் நவோதயா பள்ளிகள் விவகாரத்தை மொழிப் பிரச்சனையாக மாற்றக் கூடாது. நாம் கூட்டாட்சி அமைப்பில் வாழ்கிறோம். குடியரசின் ஒரு பகுதியாக தமிழகம் உள்ளது. ஓரடி முன்னேறினால், மத்திய அரசும் ஓரடி முன்னால் வரும்.
ஜவஹர் நவோதயா பள்ளிகளை திணிப்பாக பார்க்காமல், மாநில மாணவர்களுக்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும். மாநில அரசின் மொழிக் கொள்கை இதுதான் என்று மத்திய அரசிடம் கூறுங்கள், அது குறித்து ஆலோசனை நடத்துங்கள்” என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.