

புதுடெல்லி: உண்மையான ஐயப்ப பெண் பக்தர்கள் 10 முதல் 50 வயது வரை சபரிமலைக்கு செல்வதில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்த தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் பி.வி நாக ரத்தினா, எம் எம் சுந்தரேஷ், ஏ.அமானுல்லா, ஏ ஜி மசி, பிபி வர்லே, ஆர் மகாதேவன், ஜோய்மால்யா பக் ஷி ஆகியோரை கொண்ட ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையின் போது, கடவுள் நம்பிக்கையற்றவர்கள், கோயிலில் விதிக்கப்பட்டுள்ள மத ரீதியான கட்டுப் பாடுகளை எதிர்த்து வழக்கு தொடர முடியுமா ? பெரும்பான்மையான நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை புண்படலாமா ? என்று நீதிபதிகள் கேட்டனர்.
தீர்ப்புக்கு ஆதரவாகவும், தீர்ப்புக்கு பிறகு சபரிமலைக்கு சென்று எதிர்ப்புகளை சந்தித்த கனக துர்கா, பிந்து அம்மினி சார்பிலும் மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் வாதிடுகையில், "நம்பிக்கை உள்ளதோ, இல்லையோ ஆனால் கோயிலுக்கு செல்லும் போது மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். சட்ட ரீதியான உரிமையை இந்த இருவரும் மீறவில்லை. சட்ட ரீதியான உரிமையை மீட்கவே போராட வேண்டி உள்ளது’’ என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், "உங்கள் வாதத்தை ஏற்றுக்கொண்டால் ஒவ்வொரு நம்பிக்கையாளரும் இப்படிதான் வழிபாடு இருக்க வேண்டும் என சொல்ல தொடங்குவார்கள். அதற்கு முடிவே இல்லாமல் போகும்" என்று குறிப்பிட்டார்.
மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், "10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் மிகவும் ஆக்கத்துடனும், ஊக்கத்துடனும் இருக்கின்றனர் இந்த வயதுடைய பெண்களுக்கு சபரிமலையில் அனுமதி மறுக்கப்படுவது வழிபாட்டு உரிமை என்ற அடிப்படை உரிமையை மறுப்பதாகும். சபரிமலை தீர்ப்புக்குப் பிறகு இரு பெண்களும் சபரிமலைக்கு சென்று திரும்பியபோது கோயிலை தூய்மைப்படுத்த வேண்டும் என்று சிலர் பேசினார்கள்.
ஒவ்வொரு மதத்திற்கும் தன்னகத்தே சீர்திருத்தம் செய்து கொள்ளும் பண்புகள் உள்ளன" என வாதிட்ட போது, நீதிபதி பிவி நாகரத்தினா, "கடவுள் நம்பிக்கையற்ற வட இந்தியர் எப்படி வழிபாட்டு உரிமையை கோர முடியும்? வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்பது தான் நமது நாட்டின் பலம். 10 முதல் 50 வரையிலுள்ள உண்மையான ஐயப்ப பெண் பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதில்லை" என்று குறிப்பிட்டார். அடுத்த விசாரணை மே 5ம் தேதியும் தொடர்கிறது.