

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் நேற்றைய இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின்போது பதற்றம் நிறைந்த தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் சிறப்பு காவல் பார்வையாளர் அஜய் பால் சர்மா ஐ.பி.எஸ். நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் கோட்டையாகக் கருதப் படும் டைமண்ட் ஹார்பர் பகுதியில், வன்முறையைத் தடுக்க அஜய் பால் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவதால் ‘சிங்கம்’ என அழைக்கப்படும் உத்தரப் பிரதேச கேடர் அதிகாரியான அஜய் பால் சர்மா, தேர்தல் விதிகளை மீறி செயல்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ஃபால்டா தொகுதி டி.எம்.சி.வேட்பாளர் ஜஹாங்கிர் கானின் வீட்டிற்கே நேரடியாகச் சென்ற அவர், ‘‘வாக்காளர்களை அச்சுறுத்த முயன்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’’ என எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.எம்.சி. சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பதற்றம் நிறைந்த பகுதியில் நேற்று மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைமை இயக்குநர் ஞானேந்திர பிரதாப் சிங்குடன், அஜய் பால் சர்மா ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று ஆய்வு செய்தார்.