

ஆந்திர இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி
அமராவதி: ஆந்திராவில் 65 முக்கிய கோயில்களில் விரைவில் அன்னதானம் வழங்கப்படும் என மாநில இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி தெரிவித்தார்.
இது குறித்து அவர் நேற்று அமராவதியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆந்திராவில் தெலுங்கு தேசம்-பாஜக- ஜனசேனா கூட்டணி ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத் துறை மிகச் சிறப்பாக பணியாற்றி உள்ளது. ஆனால் முந்தைய ஆட்சியில் இந்து கோயில்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. ராம தீர்த்தம் கோயிலில் மூலவர் ஸ்ரீராமரின் தலை துண்டிக்கப்பட்டது.
விஜய வாடா கனக துர்கையம்மன் கோயிலில் வெள்ளி சிம்மாசனம் காணாமல் போனது. அந்தர்வேதியில் கோயில் ரதம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இவ்வளவு நடந்தும் கடந்த ஜெகன் அரசு யாரையும் கைது செய்யவில்லை. திருப்பதி தேவஸ்தானம் உட்பட மாநிலத்தின் அனைத்து முக்கிய கோயில்களிலும் பக்தர்களுக்கு சிறப்பான சேவை அளிக்க வேண்டும் என்பதே முதல்வரின் உத்தரவாகும்.
இதனால் ஆந்திராவில் சனாதன தர்மத்தை காக்கும் இடங்களாக கோயில்கள் மாறின. வருமானம் இல்லாத கோயில்களில் விளக்குகூட ஏற்ற முடியாத சூழல் கடந்த ஆட்சியில் இருந்தது. ஆனால் தற்போது சிறு கோயில்களுக்கும் நிதி வழங்கப்படுகிறது. பொது நிதியில் இருந்து 962 கோயில்களும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளை நிதியிலிருந்து 1,200 பஜனை கோயில்களும் கட்டப்பட்டு வருகின்றன.
அனைத்து கோயில்களிலும் ஆன்லைன் முறை கொண்டு வரப்பட்டதால், முறைகேடுகள் நடப்பது மிகவும் குறைந்து விட்டது. 2 ஆண்டுகளில் 449 கோயில்களுக்கு அறங்காவலர்கள், 970 கோயில்களுக்கு தர்மகர்த்தாக்கள் நியமனம் செய்யப்பட்டனர். வரும் நாட்களில் 65 முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.