

புதுடெல்லி: வன்முறையைத் தூண்டுபவர்களுக்கு மலர்களே நமது பதிலாக இருக்க வேண்டும் என்று போராட்டக்காரர்களுக்கு சோனம் வாங்சுக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அமைதி, அமைதி மட்டுமே எனது வழி... ஜந்தர் மந்தரில் நமது போராட்டங்கள் அமைதியான முறையில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிற இடங்களில் சில சமூக விரோத சக்திகள் இந்த அமைதியான போராட்டத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்ட முயல்வது அறிந்து வேதனையடைகிறேன்.
எதிர்பக்கத்தில் இருப்பவர்கள் என்ன செய்தாலும் சரி, அவர்களுக்கு நமது பதில் மலர்களாக மட்டுமே இருக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் இந்த மரபைக் தயவுசெய்து கடைப்பிடியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய கடந்த 20-ம் தேதி, ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த சிஜேபி முயன்றது.
அப்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர். இதில், இரு தரப்பிலும் பலர் காயமடைந்ததோடு, டெல்லியின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.