ம.பி.யில் குப்பையில் வீசப்பட்ட 2 கிலோ வெள்ளிக் குவளை மீட்பு

ம.பி.யில் குப்பையில் வீசப்பட்ட 2 கிலோ வெள்ளிக் குவளை மீட்பு
Updated on
1 min read

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்​தூரின் ராஜேந்​திரா நகர் பகுதியில் கடந்த சனிக்​கிழமை மூதாட்டி ஒரு​வர் வீட்​டில் சேகரமான தினசரி குப்​பையை அவ்​வழி​யாக வந்த மாநக​ராட்​சிக் குப்பை சேகரிப்பு வாக​னத்​தில் போட்​டார்.

அப்​போது தவறு​தலாக ஆன்​மீக சடங்​கு​களுக்கு பயன்படுத்தப்படும் 2 கிலோ வெள்​ளிக் குவளை இருந்த பையையும் அதில் போட்​டு​விட்​டார். இதை குடும்​பத்​தினர் உணர்வதற்​குள் நகரின் குப்பை மாற்​றும் நிலை​யத்​தில் குப்பைகள் கொட்​டப்​பட்​டு, பிறகு அங்​கிருந்து திடக்​கழிவு மேலாண்மை நிலை​யத்​துக்கு அனுப்பி வைக்​கப்​பட்டு விட்​டன. மூதாட்​டி​யின் குடும்​பத்​தினர் உதவி கேட்டு மாநக​ராட்சி அதிகாரிகளை அணுகினர். அவர்​கள் வெள்​ளிக் குவளையை மீட்பதற்​கான முயற்​சிகளை தொடங்​கினர்.

இதற்​குள் குப்​பைகளை காகிதம், பிளாஸ்​டிக், உலோகம் என தரம் பிரிக்​கும் அந்த மையத்​தில் அடை​யாளம் தெரி​யாத அந்த குவளையை உலோக கழி​வுக் குவியலுக்​குள் ஊழியர்​கள் சேர்த்துவிட்​டனர். இதையடுத்து டன் கணக்​கிலான அந்த உலோக கழி​வுக் குவியலை தூய்​மைப் பணி​யாளர்​கள் சுமார் 48 மணி நேரம் ஆராய்ந்​தனர். இறு​தி​யாக மங்​கலாக இருந்த அந்த குவளையை அடை​யாளம் கண்டு மீட்​டனர்.

இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் விஜய் யாதவ் கூறுகையில், “இந்தூர் நகரம் முழுவதிலுமிருந்து தினமும் நூற்றுக்கணக்கான டன் கழிவுகள் இந்த மையத்திற்கு கொண்டு வரப்படுவதால், முதலில் கண்டுபிடிப்பது சாத்தியமற்றதாகவே தோன்றியது.தகவல் தெரிவிப்பதில் சில மணிநேரம் தாமதம் ஏற்பட்டிருந்தாலும் கூட, ரூ.5 லட்சம் மதிப்புள்ள அந்த குவளை நிரந்தரமாக தொலைந்துபோயிருக்கும்” என்றார்.

இதற்​கிடை​யில் அந்த மூதாட்டி ஆன்​மீக யாத்​திரைக்​காக வெளியூர் சென்​றிருப்​ப​தால் அவர் திரும்​பும் வரை வெள்​ளிக் குவளையை பாது​காப்​பாக வைத்​திருக்க உள்​ளூர் நகராட்சி கவுன்​சிலர் பிர​சாந்த் பட்​வே​யிடம்​ அதி​காரி​கள்​ ஒப்​படைத்​துள்​ளனர்​.

ம.பி.யில் குப்பையில் வீசப்பட்ட 2 கிலோ வெள்ளிக் குவளை மீட்பு
கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடர்கிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in