19 பெண்களை தீவிரவாதிகளாக்கிய ஷாகின்: டெல்லி குண்டுவெடிப்புக்கு பின் அனைவரும் மாயம்
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. 13 பேர் உயிரிழந்த இந்த வழக்கை என்ஐஏ, டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் இணைந்து விசாரித்து வருகின்றன.
வெடி பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான லக்னோவை சேர்ந்த பெண் மருத்துவர் ஷாகின் ஷாகித்துக்கு டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்பிருப்பது தெரியவந்தது. ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மகளிர் பிரிவுக்கான இந்தியத் தலைவராக ஷாகின் செயல்பட்டு வந்துள்ளார்.
மேடம் சர்ஜன் என்று அழைக்கப்படும் இவர், தங்கள் அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார். சமூகத்தில் தனக்குள்ள அந்தஸ்து மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி அப்பாவி பெண்கள் மற்றும் சிறுமிகளை மூளைச் சலவை செய்துள்ளார். விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள், 14 - 18 வயதுடைய சிறுமிகளை இவர் இலக்காக வைத்து செயல்பட்டுள்ளார். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் என்பதாலும் கையாள்வது எளிது என்பதாலும் இவர்களை தேர்வு செய்துள்ளார்.
இதன் மூலம் 19 பெண்களை இவர் தீவிரவாதப்பாதைக்கு அழைத்து வந்துள்ளதை விசாரணை அதிகாரிகள் உறுதி செய்துள்னர். இந்நிலையில் அந்த 19 பெண்களையும் இப்போது காணவில்லை.
மேலும் இவரது வாட்ஸ் அப் உரையாடல்கள், தற்கொலைப் படைக்கான விரிவான திட்டங்கள், ‘முஜாகித் ஜங்ஜு’ என்ற ரகசிய பெயரில் வெடி பொருட்கள் தொடர்பான உத்தரவுகள், ஆள்சேர்ப்பு உத்திகள் என பலவற்றை வெளிப்படுத்தியுள்ளன.
