

புதுடெல்லி: டெல்லியில் 10-ம் வகுப்பு மாணவர் ஒருவரின் தற்கொலை தொடர்பாக அப்பள்ளி முன்பு பெற்றோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி அசோகா பிளேஸ் பகுதியில் செயின்ட் கொலம்பா பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் டெல்லி ராஜேந்திர பிளேஸ் மெட்ரோ நிலைய நடைமேடையில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தனது நோட்டுப் புத்தகத்தில் இந்த தற்கொலைக்கு காரணமாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் அந்த நோட்டு புத்தகத்தில், “அம்மா... என்னை மன்னித்து விடுங்கள்” என்று எழுதியுள்ளார்.
இது தொடர்பாக மாணவரின் தந்தை அளித்த போலீஸ் புகாரில், “சிறிய விஷயங்களுக்கு சில ஆசிரியர்கள் தன்னை திட்டுவதாகவும் அவமானப்படுத்துவதாகவும் எனது மகன் என்னிடம் பலமுறை புகார் கூறியுள்ளார். இதனை பள்ளி அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்ற பிறகும் ஆசிரியர்கள் நடத்தையில் எந்த மாற்றமும் இல்லை”என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் செயின்ட் கொலம்பா பள்ளி முன்பாக பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.