

புதுடெல்லி: தமிழகத்தில் கலந்தாய்வு முடிந்த பின்னரும் காலியாக இருந்த 153 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்டது.
அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட இடங்கள் நிரம்பாமல் இருந்தால் அதனை நிரப்பும் வகையில் கட்-ஆஃப் மதிப்பெண் சதவீதத்தை குறைத்து அந்த இடங்களை முழுவதுமாக மீண்டும் தமிழக அரசு வசம் ஒப்படைக்க வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஏற்கெனவே, இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நிரம்பாமல் உள்ள 40 இடங்களை நிரப்ப ஏதுவாக, கட்-ஆஃப் மதிப்பெண் சதவீத த்தை குறைத்து, அந்த இடங்களை தமிழகம் வசமே திரும்ப ஒப்படைப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி ஆஜராகி, கட்-ஆஃப் மதிப்பெண் சதவீதத்தை இவ்வாண்டு குறைக்க முடியாது என்று முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்தார்.
அப்போது, தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பில், கட் ஆஃப் மதிப்பெண் சதவீதத்தை குறைத்து நிரம்பாமல் இருக்கும் 40 இடங்களை தமிழகம் வசம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், “கட்-ஆஃப் மதிப்பெண் சதவீதத்தை ஏன் குறைக்கக்கூடாது? 1800 உயர்சிறப்பு மருத்துவ படிப்புக்கான இடங்கள் காலியாக உள்ளன. இவை நிரப்பப்படாமல் வீணாவதை விரும்பவில்லை. காலியாக உள்ள உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான இடத்தை நிரப்புவதற்கு ஏதுவாக கட்-ஆஃப் மதிப்பெண் சதவீதத்தை குறைப்பது குறித்து பரிசீலித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு,வழக்கு விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.