

சகோதரன் ஆன்மா அமைதி பெற கயாவில் திதி கொடுத்த ரஷ்ய குடும்பத்தினர்.
கயா: உக்ரைன் போரில் கொல்லப்பட்ட ரஷ்ய ராணுவ வீரரின் ஆன்மா அமைதி பெற வேண்டி, அவரது குடும்பத்தினர் பிஹாரில் உள்ள கயாவில் திதி கொடுக்கும் சடங்கு செய்தனர்.
இந்தியாவில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, பிஹாரின் கயாவில் உள்ள ஃபல்கு நதிக்கரைக்கு வந்து திதி கொடுத்து பிரார்த்தனை செய்வது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த லலிதா ராதா ராணி ஃபேஸ், அவரது கணவர் சுந்தரா ஃபேஸ் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் உக்ரைன் போரில் உயிரிழந்த லலிதாவின் சகோதரர் ஆன்மா அமைதி பெற வேண்டி, கயாவின் ஃபல்கு நதிக்கரையில் பாரம்பரிய ‘பிண்ட தானம்’ (திதி கொடுக்கும் சடங்கு) செய்தனர். அப்போது அனைத்து பாரம்பரிய சடங்குகளையும் நெறிமுறைகளையும் முறைப்படி பின்பற்றி இந்த வழிபாட்டைச் செய்தனர்.
போரில் தனது மைத்துனர் இறந்த பிறகு ஒட்டுமொத்த குடும்பமும் நிலைகுலைந்து போனதாக சுந்தரா தெரிவித்தார். கயாவில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் முக்கியத்துவம் உலகம் முழுவதும் அறியப்பட்டது என்று குறிப்பிட்ட அவர், இந்த சடங்கை இங்கு செய்வதன் மூலம் மறைந்த ஆன்மாவுக்கு அமைதி கிடைக்கும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் கூறினார்.